ஆம்ஆத்மி கட்சி அலுவலம் தாக்கப்பட்டதற்கு கெஜ்ரிவால் கண்டனம்: தொடர்ந்து பாதுகாப்பை ஏற்க மறுப்பு
காசியாபாத்: காசியாபாத்தில் உள்ள தங்களது கட்சியின் தலைமை அலுவலகம் தாக்கப் பட்டதிற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில், காசியாபாத்தில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டின் அருகே உள்ள உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த சுமார் 50 பேர், கற்களை வீசி தாக்கியதுடன், அலுவலக ஜன்னலை அடித்து உடைத்தனர். அங்குள்ள ஊழியர்களையும் தாக்க முற்பட்டதாகவும், பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர்கள், 'இந்து ரக்சா தள்' கொடியை ஏந்தி வந்துள்ளனர்.
காஷ்மீரை பிரிவினைவாதத்திற்கு ஆதரவு தரும் வகையில் கருத்து வெளியிட்ட பிரசாந்த் பூசனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டதாக சந்தேகிக்கப் படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆம் ஆத்மியின் மூத்த நிர்வாகி பிரசாந்த் பூஷன் காஷ்மீர் தன்னாட்சி மற்றும் அங்குள்ள ராணுவ வெளியேற்றம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து கடும் விமர்சனத்திற்குள்ளானது. நாட்டை பிரிவினைபடுத்தும் விதமாகவும், தேச துரோகமாக இருப்பதாகவும் பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டித்தன. ஆனால் இது ஆம் ஆத்மியின் கருத்து அல்ல. பூனுனின் தனிப்பட்ட கருத்து என்று கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்த சம்பவத்திற்கு பா.ஜனதா கட்சியும், அதன் சார்பு அமைப்புகளும் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பிரசாந்த் பூஷன் கடும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "2011-ம் ஆண்டு தனது வீட்டில் தாக்குதல் நடத்திய கும்பல்தான் இன்று தாக்குதல் நடத்தியது. தேசிய கட்சி என்று அழைக்கப்படும் பா.ஜனதா கட்சி, குண்டர்களை ஆம் ஆத்மிக்கு எதிராக கட்டவிழ்த்து விடத் தொடங்கியிருக்கிறது.
ஆம் ஆத்மியின் வளர்ச்சியால் பா.ஜனதாவும் அதனை சார்ந்த சங்பரிவார அமைப்புகளும் ஆத்திரம் அடைந்துள்ளன. மிகப்பெரிய அரசியல் கட்சி இதுபோன்று வன்முறையில் இறங்குவது துரதிர்ஷ்டவசமானது. இது அவர்களின் பாசிச மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்ற தாக்குதலால் காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு ஏற்பட்டு விடுமா ? நாங்கள் எங்களின் நிலையை ஏற்கனவே அறிவித்து விட்டோம்' எனக் கூறியுள்ளார்.
மேலும் தாக்குதலைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கான பாதுகாப்பை மறுபரிசீலனைச் செய்யும் படி காசியாபாத் காவல்துறை வலியுறுத்தியது. ஆனால், அதனை ஏற்க மறுத்த கெஜ்ரிவால், தனக்கோ, தனது அலுவலகத்திற்கோ பாதுகாப்பு தேவையில்லை என மறுத்து விட்டாராம்.