ஜனநாயக திருவிழா விநோதம்- அதிக வாக்குகள் வாங்கியதோ காங். கூட்டணி- ஆட்சி என்னமோ பாஜகவுக்கு!
குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அணிதான் பாஜக அணியைவிட கூடுதல் வாக்கு சதவீதம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த மாநிலங்களில் அஸ்ஸாமும் ஒன்று. தேசிய இனப் பிரச்சனை, சிறுபான்மையினருக்கான நெருக்கடிகள், பிற மாநிலத்தவர் குடியேற்றம் என பல்வேறு சிக்கல்களைக் கொண்ட மாநிலம் அஸ்ஸாம்.
இம்மாநிலத்தில் பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தம் எப்போதும் கை கொடுக்கவே இல்லை. இதனால் வழக்கம் போல காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை உடைத்து தம்மை பாரதிய ஜனதாவாக உருமாற்றிக் கொண்டது. இதன்விளைவாக கடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்தது பாஜக.
பாஜகவின் ஒரு அங்கமாகவே மாறிய தேர்தல் ஆணையம்.. அனைத்து உதவிகளையும் செய்தது.. பிரஷாந்த் கிஷோர் தாக்கு
அஸ்ஸாமில் பாஜக
அதேநேரத்தில் நாட்டின் பிற மாநிலங்களில் சி.ஏ.ஏ உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை படுதீவிரமாக பேசும் பாஜக, அஸ்ஸாமில் அடக்கித்தான் வாசிக்கும். அதுவும் தேசிய குடிமக்கள் பதிவேடு பிரச்சனையில் லட்சக்கணக்கானோர் அஸ்ஸாமில் குடியுரிமை அற்றவர்களாக்கப்பட்ட போது பாஜகவும் அதிர்ந்துதான் போனது.
காங். கூட்டணி
இந்த நிலையில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் ஆயத்தமாகின. இதுவரை எந்த மாநிலத்திலும் முன்னெடுக்காத ஒரு முயற்சியை காங்கிரஸ் தீவிரமாக மேற்கொண்டது. பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகள், சிறுபான்மை கட்சிகள், மாநில கட்சிகள், இன உரிமை கோரும் கட்சிகள் என அத்தனை கட்சிகளையும் வளைத்துப் போட்டு மெகா கூட்டணியை அமர்க்களமாக அமைத்தது.
தேர்தல் கருத்து கணிப்புகள்
இதனால் அஸ்ஸாமில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியானது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் அஸ்ஸாமில் பாஜகவுக்கு வாய்ப்பு இருக்கிறது என கூறினாலும் காங்கிரஸ் அணி இந்த கனவை தகர்க்க வாய்ப்பிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியே வந்தன.
மீண்டும் பாஜக ஆட்சி
தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 73 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கு 52 இடங்கள்தான் கிடைத்துள்ளது. அதேநேரத்தில் பாஜக கூட்டணியைவிட காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
காங். அதிக வாக்குகள்
ஆம் பாஜக கூட்டணிக்கு மொத்தம் 39.7% வாக்குகள்தான் கிடைத்துள்ளன. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியோ 42.36% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. உண்மையில் மக்கள் செல்வாக்கு பெற்றிருப்பது, மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பதும் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி. ஆனால் இந்திய ஜனநாயகத்தில் வாக்கு சதவீதத்தை விட பெறும் இடங்கள்தான் ஆட்சிக்கு தேவை. அதனால்தான் அஸ்ஸாமில் பாஜக ஆட்சி அமைந்திருக்கிறது.. இது ஜனநாயக திருவிழாவின் விநோதமே!