வெள்ளத்தில் நீந்தி சுதந்திர தினக் கொடியேற்றம்... அசத்திய அஸ்ஸாம் மாணவர்கள்
மாநிலம் முழுக்க வெள்ளக் காடாக மாறிவிட்ட நிலையில், மழைவெள்ளத்தில் நீந்தியபடி மாணவர்கள் பள்ளி சென்று தேசிய கொடியை ஏற்றி தேசபக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
குவஹாட்டி: அஸ்ஸாம் மாநிலம் முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், மழைவெள்ளத்தில் நீந்தியபடி மாணவர்கள் பள்ளி சென்று தேசியக் கொடியை ஏற்றி தேசபக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், 21 மாவட்டங்களில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பள்ளி மாணவர்கள் மாணவியர் ஆர்வத்துடன் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தைக் கொண்டாடினர். கனமழை எதுவும் அஸ்ஸாம் மாணவர்களின் தேசபக்தியை குலைத்துவிடாது என்று தெரிய வந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.
வெள்ளப் பெருக்கால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தால் சூழப்பட்ட பள்ளி ஒன்றின் கூரைமேல் ஏறி நின்று சில மாணவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.
இன்னும் சில பள்ளிகளில், சிறார்களுடன் பெரியவர்களும் வெள்ளத்தில் நீந்திச் சென்று பள்ளிகளில் கொடியேற்றினர். இந்தப் படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.