சட்டசபை தேர்தல்: ஹரியானாவில் 76%, மகாராஷ்டிராவில் 64% வாக்குப் பதிவு!
மும்பை/ சண்டிகர்: சட்டசபை தேர்தலில் ஹரியானாவில் 76%, மகாராஷ்டிராவில் 64% வாக்குகள் பதிவாகின. ஹரியானாவில் சில இடங்களில் வாக்குப் பதிவின் போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 4 ஆயிரத்து 119 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஏறத்தாழ எட்டரை கோடி வாக்காளர்களை கொண்ட இம்மாநிலத்தில் பிற்பகல் வரை மந்தமான வாக்குப்பதிவு இருந்தது.
பிற்பகலில் வாக்குப்பதிவு அதிகரித்தபோதிலும் மாலை 6 மணிவரை மொத்தம் 64% வாக்குகள் பதிவாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 76% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இம்மாநிலத்தில் சில இடங்களில் வாக்குச் சாவடியை கைப்பற்றுவதற்கான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
இரு மாநில தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.