ராகுல் பேச்சைக் கேட்டுட்டுப் போங்களேன்.. கெஞ்சிய ஷீலா...!
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட கூட்டத்திற்கு வந்தவர்கள் படு வேகமாக கலைந்து போக ஆரம்பித்ததால் அதிர்ச்சி அடைந்த டெல்லி முதல்வர் ஷீலா தீ்ட்சித், தயவு செய்து ராகுல் காந்தி பேச்சை மட்டுமாவது கேட்டு விட்டு கலைந்து போகுமாறு மைக்கில் கோரிக்கை விடுத்தார்.
நேற்று டெல்லியில் நடந்த ராகுல் காந்தி தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதுதான் இந்தக் காமெடி நடந்தது.
நேற்று பெங்களூரில் மோடி பேசினார். டெல்லியில் ராகுல் காந்தி பேசினார். ராகுல் காந்தியின் கூட்டத்திற்கு எதிர்பாராத வகையில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
டெல்லி சட்டசபைத் தேர்தல்
டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் அங்கு சூடு பிடித்துள்ளது.
ராகுல் காந்தியின் கூட்டம்
நேற்று டெல்லியில் ராகுல் காந்தியின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பெரும் திரளானவர்கள் வருவார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பினர். ஆனால் கூட்டம் வரவில்லை.
சுருக்கமாக பேச்சை முடித்த ராகுல்
கூட்டத்தின் அளவைப் பார்த்து அப்செட் ஆன ராகுல் காந்தி, தனது பேச்சை சுருக்கிக் கொண்டார்.
கேட்க பொறுமையில்லாத கூட்டம்
ராகுல் காந்தியின் சுருக்கமான பேச்சைக் கூட கேட்கும் பொறுமை கூட்டத்திற்கு இல்லை போலும். சாரை சாரையாக வந்தவர்கள் எல்லாம் நடையைக் கட்டியபடி இருந்தனர்.
கேட்டு வி்ட்டுப் போங்கள் சகோதரிகளே..
இதனால் மைக்கைப் பிடித்த ஷீலா தீட்சித், சகோதரிகளே, ராகுல்ஜியின் பேச்சை மட்டுமாவது கேட்டு விட்டுப் போங்கள் என்று கோரிக்கை விடுக்கும் நிலை ஏற்பட்டது.
லேட்டாக தொடங்கியதால்
நேற்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று அறிவி்க்கப்பட்டிருந்தது. அப்போது ஓரளவு கூட்டமும் இருந்தது. ஆனால் ராகுல் காந்தி 2 மணி நேரம் தாமதமாக வந்ததால் கூட்டம் குறையத் தொடங்கியது.
தலைவர்கள் பேச்சால் எரிச்சல்
மேலும் ராகுல் காந்திக்கு முன்பு பேசியவர்கள் 'சொத சொத'வென பேசியதால் எரிச்சலடைந்து பாதிப் பேர் போய் விட்டனர்.