இனியும் சுப்ரீம் கோர்ட்டை காண்பித்து தப்பிக்க முடியாது.. வசமாக சிக்கிக்கொண்டது மத்திய அரசு!
டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இப்போதைக்கு தீர்ப்பு வழங்காது என தெரிந்துவிட்டது. எனவே, இப்போது பந்து பாஜக 'கோர்ட்டில்' விழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்தே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே கூறிவந்தார்.

தீர்ப்பு சாதகமாக வந்துவிடும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை வரை கூறி வந்தார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு தீர்ப்பு வழங்க முடியாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர். விரைந்து தீர்ப்பு வழங்குமாறு வழக்கறிஞர்கள் கோரிக்கைவிடுத்ததற்கு நீதிபதிகள் இவ்வாறு இன்று பதில் அளித்துள்ளனர்.
தீர்ப்பு சாதகமாக வந்தால் ஜல்லிக்கட்டு நடத்தலாம், பாதகமாக வந்தால் நீதிமன்ற தீர்ப்பை காரணம் காண்பித்து தப்பிவிடலாம் என மத்திய அரசும், தமிழகத்து பாஜகவினரும் திட்டமிட்டிருந்தனர். ஏனெனில் கடந்த வருடம் சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில் கூட இதேபோன்ற ஆட்டத்தை ஆடி அவர்கள் எளிதாக தப்பிவிட்டனர்.
ஆனால், இம்முறை நீதிமன்றம் இப்போதைக்கு தீர்ப்பு வழங்காது என தெரிந்துவிட்டது. எனவே, இப்போது பந்து பாஜக 'கோர்ட்டில்' விழுந்துள்ளது. இனியும் அவர்கள் தப்பியோட முடியாது. அவசர சட்டம் பிறப்பித்தே ஆக வேண்டும். ஏனெனில் ஜல்லிக்கட்டு நடத்ததான் சுப்ரீம்கோர்ட் தடை விதித்துள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்க தடையில்லை. இப்படி அவசர சட்டம் கொண்டுவராவிட்டால், பாஜக மக்களின் கோபத்திற்கு பதில் சொல்ல வேண்டிவரும்.
அதேநேரம் தமிழக அரசு எப்படியாவது ஜல்லிக்கட்டை நடத்ததியே தீருவோம் என அறிவித்துள்ளது. இந்த வார்த்தையில் அது உறுதியாக இருக்குமா, அல்லது, மக்களின் கோபத்தை எதிர்கொள்ளுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications