பண்டிகை கொண்டாட ஊருக்கு திரும்பிய அதிமுக தொண்டர்கள்: பெங்களூர் மத்திய சிறை வளாகம் வெறிச்சோடியது
பெங்களூர்: பண்டிகை காலம் நடைபெறுவதால் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் குவிந்திருந்த அதிமுகவினர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இதனால் சிறைச்சாலை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலிதா, கடந்த சனிக்கிழமை முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்றுடன் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு ஏழு நாட்கள் ஆகிவிட்டன. சிறையில் அடைக்கப்பட்ட மறுநாள் முதல் பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் அதிமுக தொண்டர்கள் கூட்டம் குவிந்தது.

அம்மாவை விடுதலை செய், கருணாநிதி ஒழிக என்று கோஷங்களை எழுப்பியபடி அதிமுக தொண்டர்கள் உருண்டு, புரண்டு அழுது கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு தொண்டர்களில் பலரும் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டனர். ஒரு சிலர் மட்டும் பரப்பன அக்ரஹாராவில் தென்படுகின்றனர். அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் ஊருக்கு போனவர்கள் மீண்டும் இங்கு வந்து தர்ணா நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் வேலுமணி ஆகியோர் இன்று பரப்பன அக்ரஹாரா வந்திருந்தனர். ஆயினும் ஜெயலலிதா இதுவரை யாரையும் சந்திக்கவில்லை என்பதால், இவர்களையும் சந்திக்க மறுத்துவிட்டார். எனவே அவர்களும் திரும்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications