பெங்களூரி்ல் பெண் கடத்தப்பட்டு பலாத்காரம்: வழக்கை பதிவு செய்யாத இன்ஸ்பெக்டர் கைது!
பெங்களூர்: பாலியல் புகார் அளித்த பெண்ணை அலைக்கழித்து எப்.ஐ.ஆர் போடாத இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "சபாஷ் சரியான நடவடிக்கை" என்று பொதுமக்கள் பாராட்டுகிறார்கள். பெங்களூர், பிரேசர் டவுன் பகுதியில் நண்பர்களுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவி, ஒரு கும்பலால் கடத்தி செல்லப்பட்டு காரில் வைத்து பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்.
குற்றவாளி மடக்கி பிடிப்பு
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து தேடி, குற்றவாளி ஹைதர் நாசீர் என்பவரை பிடித்து புலிகேசி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ரஃபீக் சரியான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யாததுடன், பலாத்கார வழக்காக பதிவு செய்ய முடியாது என்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் எதிரொலிப்பு
இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகிய நிலையில், கர்நாடக சட்டசபையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும், இன்ஸ்பெக்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இருப்பினும் யாரையும் கைது செய்யுமாறு சிபாரிசு செய்யும் அதிகாரம் சட்டசபைக்கு கிடையாது என்று அரசு தரப்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அரசு வளையாது
இதை கண்டித்து பாஜக மற்றும் மஜத கட்சி உறுப்பினர்கள் கருப்பு துண்டுடன் இன்று சட்டசபைக்கு வந்திருந்தனர். அப்போது முதல்வர் சித்தராமையா எழுந்து ஒரு அறிக்கை வாசித்தார். அவர் கூறுகையில் "குற்றவாளிகளுக்கு உதவுபவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் எந்த மதம், ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த அரசு வளைந்து கொடுக்காது.
இன்ஸ்பெக்டர் கைது
புலிகேசிநகர் இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் தவறிய இன்ஸ்பெக்டரை கைது செய்தது கர்நாடக வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை.
பாஜகவுக்கு தகுதியில்லை
பாஜகவுக்கு இந்த விஷயத்தில் விமர்சனம் செய்ய அருகதை கிடையாது. சட்டசபைக்குள் உட்கார்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்த உறுப்பினர்கள் உங்கள் கட்சியில் இருக்கும்போது, அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை சுமத்த யோசித்திருக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
கமிஷனரிடம் தஞ்சம்
இதனிடையே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான கல்லூரி மாணவி பெங்களூர் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கரை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், காவல் நிலையத்தில் கொடுத்த எனது தொலைபேசி எண்ணை, குற்றவாளிகள் தரப்புக்கு போலீசாரே அளித்துள்ளனர். குற்றவாளிகள் தரப்பு என்னை தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுக்கிறது. எனது பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். உறவுக்காரர்கள் எனது வீட்டைவிட்டு வெளியே போகாமல் என்னை பார்த்துவருகிறார்கள்" என்று தெரிவித்திருந்தது.
பாதுகாப்பு
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டரை பாதுகாப்புக்காக நியமித்துள்ள கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர், பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் எண், குற்றவாளிகள் தரப்புக்கு கைமாறியது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு விசாரணை அதிகாரியான உதவி கமிஷனர் நூருல்லா ஷெரிப்புக்கு உத்தரவிட்டார்.