மேற்கு வங்கத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்த தம்பதி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் நிர்வாணமாக்கப்பட்டு மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை குறை கூறியுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தோலி கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சிப் மைதி. அவரும், அவரது மனைவியும் சேர்ந்து ஒரு பெண் மீது திருட்டுப்பட்டம் சுமத்தி அவரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மைதி மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். ஆனால் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்,
என் மீது திருட்டுப் பட்டம் கட்டி நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து கம்பால் அடித்தார்கள். சூடான இரும்பால் சூடு போட்டார்கள் என்றார்.
மைதி மற்றும் அவரது மனைவிக்கு ஜாமீன் வழங்கியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது பற்றி முன்னாள் அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான காந்தி கங்குலி கூறுகையில்,
அந்த பெண் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர் என்பதாலேயே அவரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த குண்டர்கள் எங்கள் ஆட்களை தாக்கி வருகின்றனர். அவர்களை எல்லாம் கைது செய்ய வேண்டும் என்றார்.
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி தான் இந்த நாடகத்தை நடத்திவிட்டு தங்கள் கட்சி மீது பழிபோடுவதாக ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிராக கொடுமை நடக்காத நாளே இல்லை. அவர்களை கொடுமைப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளை நிர்வாகம் ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications