இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலின் தலைவராக பொறுப்பேற்ற பெங்களூர் கேப்டன்
பெங்களூர்: பெங்களூரைச் சேர்ந்த கேப்டன் கிருஷ்ணா சுவாமிநாதன் இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவின் தலைமை கமாண்டிங் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா. அந்த கப்பலின் கமாண்டிங் அதிகாரியாக பெங்களூரைச் சேர்ந்த கேப்டன் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை தளபதியின் உதவியாளராக(துணை தளபதிக்கு இணையான பதவி) இருந்த அவர் கர்வார் தளத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி ரஷ்யாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவின் கமாண்டிங் அதிகாரியாக கேப்டன் சுராஜ் பெர்ரி இதுவரை இருந்து வந்தார்.
பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளி மற்றும் பிஜபூரில் உள்ள சைனிக் பள்ளியில் படித்தவர் கிருஷ்ணா. அவர் ஐஎன்எஸ் வித்யுத் மற்றும் வினாஷ், ஐஎன்எஸ் குலிஷ், மைசூர் ஆகிய கப்பல்களை வழிநடத்தியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பட்டமும், மும்பை ஜேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் முதுகலை பட்டமும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் எம்.ஏ. டிபென்ஸ் ஸ்டடீஸும், மும்பை பல்கலைக்கழகத்தில் டிபென்ஸ் மற்றும் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸில் எம்.பில். பட்டமும் பெற்றுள்ளார்.
பி.ஹெச்.டி. ஆய்வை முடித்துவிட்டு பட்டத்திற்காக காத்துள்ளார். வெல்லிங்டனில் உள்ள டிபென்ஸ் கல்லூரியில் பணியாற்றியுள்ளார்.