வாவ்.. பிக் பாக்கெட்டைப் பிடித்த காவலரைப் பாராட்டி ஹனிமூனுக்கு அனுப்பிய பெங்களூரு போலீஸ்!
பெங்களூரில் கொள்ளையரை பிடித்த காவலரை பாராட்டி ஹனிமூனுக்கு பெங்களூர் போலீஸ் அனுப்பியது.
பெங்களூரு: சபாஷ் போட வைத்துள்ளது பெங்களூரு காவல்துறையின் செயல். பிக் பாக்கெட் திருடர்களை துணிச்சலாகப் பிடித்த ஒரு இளம் போலீஸ்காரரைப் பாராட்டி அவருக்கு ரொக்கப் பரிசும், ஹனிமூன் பேக்கேஜும் கொடுத்து பெங்களூரு காவல்துறை அசத்தியுள்ளது.
அந்த பாராட்டுக்குரிய காவலரின் பெயர் ஹனுமந்த். பெல்லாந்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். சர்ஜாபூர்சாலையில் பிக் பஜார் அருகே சமீபத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார் ஹனுமந்த்.
அப்போது திடீரென உதவி உதவி என்று குரல் கேட்டது. உடனடியாக அங்கு விரைந்தார் ஹனுமந்த். அங்கு ஒருவரிடமிருந்து செல்போனைப் பறித்துக் கொண்ட சிலர் பைக்கில் தப்பமுயல்வதைப் பார்த்து விரைந்து ஓடினார் ஹனுமந்த்.
20 வயது
தனது பைக்கில் அந்த கும்பலை விரட்டிச் சென்றார். கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தூர விரட்டலுக்குப் பிறகு அத்தனை பேரையும் வளைத்தார் ஹனுமந்த். இந்த சேஸிங்கின்போது அவர் காயமடைந்தார். ஆனால் காயத்தையும் பொருட்படுத்தாமல் விரட்டிச் சென்றார். ஹனுமந்த் பிடியில் 20 வயதான அருண் குமார் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பி விட்டனர்.
அசத்தல்
கைது செய்யப்பட்ட அருண்குமார் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். ஹனுமந்த்தின் தீரச் செயலைப் பாராட்டிய பெங்களூர் காவல்துறை அவருக்கு ரூ. 10,000 ரொக்கப் பரிசு அளித்துப் பாராட்டியது. அத்தோடு நிற்கவில்லை காவல்துறை. அடுத்து அது செய்ததுதான் அசத்தலானது.
ஹனிமூன் பேக்கேஜ்
கேரளாவுக்கு ஹனிமூன் செல்வதற்கான பேக்கேஜை அவருக்குப் புக் செய்து வழங்கியது பெங்களூரு காவல்துறை. ரூ. 25,000 மதிப்பிலான ஹனிமூன் பேக்கேஜ் ஹனுமந்த்துக்கு அளிக்கப்பட்டது. 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹனுமந்த்துக்குத் திருமணமானது. திருமணமானது முதலே வேலைப் பளு காரணமாக ஹனிமூன் கூட செல்லவில்லையாம்.
டபுள் சந்தோஷம்
இந்த நிலையில் ஹனுமந்த்தின் செயலைப் பாராட்டும் வகையிலும், அவரது கடமை உணர்வை கெளரவிக்கும் வகையிலும் ஹனிமூன் + ரொக்கப் பரிசு கொடுத்து டபுள் சந்தோஷத்தைக் கொடுத்து விட்டது பெங்களூரு காவல்துறை.