பெருகும் விபச்சாரம், போதை வியாபாரம்: பெங்களூரு இந்திரா நகரில் நாளை கண்டன பேரணி
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள இந்திராநகரில் இருக்கும் ஹெச்ஏஎல் 2வது ஸ்டேஜில் நடக்கும் போதை வியாபாரம்,விபச்சாரம் ஆகியவற்றை கண்டித்து அப்பகுதி மக்கள் நாளை கண்டன பேரணி நடத்துகிறார்கள்.
பெங்களூருவில் உள்ள இந்திராநகர் ஒரு காலத்தில் பசுமையாக, அமைதியாக இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மன நிம்மதியுடன் வசித்து வந்தனர். தற்போது வணிக நிறுவனங்கள், கடைகளாக காட்சி தரும் இந்திரா நகரில் பசுமை மிகவும் குறைந்து ஒலி மாசாக உள்ளது.
மேலும் இந்திரா நகரில் போதை வியாபாரம், விபச்சாரம் என்று நடக்கக் கூடாத விஷயங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்று அஞ்சுகிறார்கள். தெருக்கள் குப்பைக்காடாக வேறு உள்ளது.
குற்றங்கள், விபச்சாரம் அதிகரித்துவிட்டதை கண்டித்து இந்திரா நகர் 2வது ஸ்டேஜில் வசிப்பவர்கள் நாளை கண்டன பேரணி நடத்துகிறார்கள். நாளை இரவு 8 மணிக்கு பேரணி துவங்குகிறது.
பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நாளை இரவு 8 மணிக்கு 12வது மெயின், 5வது கிராஸ், ஹெச்ஏஎல் 2வது ஸ்டேஜுக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.