பயணிகளை வேகமாக 'செக்' செய்ய புது வசதி.. நாட்டில் முதல் முறையாக பெங்களூர் ஏர்போர்ட்டில் அறிமுகம்
இந்தியாவில் முதல் முறையாக ஆதார் கார்ட் மூலம் உள்நுழையும் வசதியை ஏற்படுத்தியுள்ளது பெங்களூர் ஏர்போர்ட்.
பெங்களூர்: இந்தியாவில் முதல் முறையாக ஆதார் கார்ட் மூலம் உள்நுழையும் வசதியை ஏற்படுத்தியுள்ளது பெங்களூர் ஏர்போர்ட். இதன்படி ஆதார் கார்டை ஸ்கேன் செய்து அதன்முலம் போர்டிங் பணிகளை எளிதாக முடித்துக் கொள்ளலாம் என பெங்களூர் சர்வதேச விமான நிலையத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெளிநாடு செல்லும் விமானங்களிலும் போர்டிங் செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
பெங்களூரில் இருக்கும் கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்னும் சில நாட்களில் ஆதார் கார்ட் மூலம் போர்ட்டிங் பணிகளை முடிக்கும் வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் முதல் முறையாக இந்த வசதி ஏற்படுத்தப் படவுள்ளது.
இதன்படி ஆதார் கார்ட் உள்ளவர்கள் தங்களது கண்களை போர்டிங்கின் போது ஸ்கேன் செய்தோ இல்லை விரல் ரேகைகளை பதித்தோ எளிதாக உள்ளே நுழையலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது நேரத்தையும் , சரிபார்ப்பு பணிகளையும் மிகவும் எளிமையாக முடிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேழும் இதன் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கும், பழைய பாரம்பரியமான நேரம் எடுக்கும் சோதனைகள் செய்யப்படாது என கூறப்படுகிறது.
பெங்களூர் ஏர்போர்ட்டை தொடர்ந்து விரைவில் மற்ற விமான நிலையங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது. பெங்களூர் ஏர்போர்ட்டில் இன்னும் 90 நாட்களுக்குள் இந்த வசதி தொடக்கத்திற்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் பெங்களூர் ஏர்போர்டில் போர்டிங் செய்ய ஆதார் கட்டாயம் ஆக்கப்படவில்லை . ஆதார் இல்லாதவர்கள் பழைய சோதனை முறைகளைச் சந்திப்பர். இதன் மூலம் இந்திய விமானங்களுக்கு மட்டும் இல்லாமல் வெளிநாட்டு விமானங்களுக்கும் மிகவும் எளிதாக போர்டிங் செய்யலாம் என பெங்களூர் சர்வதேச விமான நிலையத் துறை தெரிவித்துள்ளது.