ஏற்கனவே கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? விழா மேடையிலேயே மோடியிடம் நிதிஷ்குமார் சரமாரி கேள்வி
பாட்னா : அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியிடம் மேடையிலேயே பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (சனிக்கிழமை) ஒருநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பாட்னாவில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழாவில் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் அம்மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்டார்.
பாட்னாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம், பாட்னா - மும்பை இடையே குளிர்சாதன வசதி கொண்ட விரைவு ரயில் இயக்கம் போன்றவற்றை நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய நிதிஷ்குமார், ஆட்சிக்கு வந்து 14 மாதங்களுக்கு பிறகாவது மோடி பீகார் வந்திருப்பதை வரவேற்கிறேன். இந்த பயணத்தின்போது மோடி பல்வேறு வாக்குறுதிகள் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அவர் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்பதை கேட்க விரும்புகிறேன்.
கருப்பு பணத்தை மீட்டு நாட்டு மக்களுக்கு தலா ரூபாய் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை அளிப்பதாக கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது. விவசாயிகளை பாதிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டம்தான் அவர்களுக்கு பயன் அளிக்கும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதா என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார். தாமதமாகியுள்ள ரயில்வே திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். இது எனது வேண்டுகோள். பீகாரின் வளர்ச்சிக்காக பிரதமர் உரிய நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வார். இதை உறுதியாக நம்புகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பீகாருக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். 14 வது நிதிக்கமிஷன் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், பீகாரில் இதற்கு முன்பு இருந்த அரசு வளர்ச்சிப் பணிகள் ஏதும் செய்யவில்லை. பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம்.
நலத்திட்டங்கள் கொண்டு வருவதில் , அரசியல் காரணமாக தாமதம் ஏற்படுகிறது என்று முதல்வர் நிதீஷ் கூறுவதை நான் ஏற்று கொள்கிறேன். முதல்வர் நிதீஷ் எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். நாங்கள் மாநில வளர்ச்சிக்காக உழைத்து வருகிறோம்.
பீகாரில் அனைத்து இடங்களும் ரயில் பாதை மூலம் இணைக்கப்பட வேண்டும் என எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. கட்டமைப்புகள் சரியில்லாமல் இருந்தால் நாட்டின் வளர்ச்சி பின்தங்கி விடும். பீகாரில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
வறுமை ஒழிப்பு- கல்வியறிவின்மையை ஒழிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பீகாரில் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீ்ட்டை அதிகரிக்க வேண்டும். பீகாரில் அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு இணைப்பு வழங்குவோம் என்றார்.