பிறக்கும் முன்பே 'பி.எட்.' பட்டம் வாங்கிய ஆசிரியர்கள்: இந்த கூத்து பீகாரில்...
பாட்னா: பீகாரில் 95 ஆசிரியர்கள் பிறக்கும் முன்பே பி.எட். பட்டம் பெற்றுள்ளனர் என்று கூறினால் நம்புவீர்களா?
பீகாரில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு உச்ச நிதீமன்றம் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து 2011-2012ம் ஆண்டில் 34 ஆயிரத்து 540 ஆசிரியர்களை பீகார் மாநில அரசு பணியமர்த்தியது. அதில் பலர் போலி சான்றிதழ்களை அளித்ததாக கல்வித் துறைக்கு புகார்கள் வந்து குவிந்தன.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 95 ஆசிரியர்கள் போலி பி.எட். சான்றிதழை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பலர் பிறக்கும் முன்பே பட்டம் பெற்றுள்ளனர், மேலும் பலர் 21 வயதுக்கு முன்பே பட்டம் பெற்றுள்ளனர்.
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்த ஷிவ்நாராயண் யாதவ் அவர் பிறப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே பி.எட். பட்டம் பெற்றுள்ளார். அவரது பிறப்பு சான்றிதழை வைத்து இது கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு சம்பரனில் பணிபுரிந்த ப்ரீத்தி குமாரி என்ற ஆசிரியை அளித்துள்ள பி.எட். சான்றிதழில் உள்ள வருடமும், அவரது பிறப்பு சான்றிதழில் உள்ள வருடமும் வியக்க வைக்கிறது. காரணம் அவர் பிறக்க 3 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பி.எட். பட்டம் பெற்றதாக அந்த போலிச் சான்றிதழில் உள்ளது.
போலிச் சான்றிதழ் அளித்த 95 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கான்டிராக்ட் மூலம் பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களில் ஆயிரம் பேர் போலி சான்றிதழ் அளித்துள்ளனர் என்று பீகார் மாநில கல்வி அமைச்சர் ப்ரிஷென் பட்டேல் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
கடந்த 2006ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரை 1 லட்சத்து 42 ஆயிரம் ஆசிரியர்கள் கான்டிராக்ட் அடிப்படையில் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications