பீகாரில் சறுக்கல்... அசாமில் முன் கூட்டியே முதல்வர் வேட்பாளரை அறிவித்தது பாஜக !
டெல்லி: டெல்லி மற்றும் பீகாரில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் முதல்வர் வேட்பாளரை நிறுத்தாமல் தேர்தலை சந்தித்ததால் பெரும் சறுக்கலை சந்தித்தது பாஜக. எனவே அசாம் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாகவே முதல்வர் வேட்பாளராக சர்பானந்தா ஸ்னோவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தின் ஆட்சிக் காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அந்த மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது அசாமில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் தருண் கோகாய் முதல்வராக இருக்கிறார்.
காங்கிரஸ் சார்பில் தருண் கோகாய் மூன்று முறை முதல்வராக தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார். தற்போது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்து வருகிறது. இந்நிலையில் மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வரும் பாஜக இதை பயன்படுத்தி அசாமில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே பீகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும் சருக்கலை சந்தித்தது. நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு முன் கூட்டியே முதல்வர் வேட்பாளரை முன்னிருத்தாதே காரணம் என கூறப்பட்டு வந்தது.
இதனால் அசாமில் தங்களது பலத்தை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளது பாஜக. எனவே வேலைகளில் தற்போது இடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக பாஜகவின் நாடாளுமன்ற குழு மத்திய அமைச்சராக இருக்கும் சர்பானந்தா ஸ்னோவாலை முதல்வர் வேட்பாளராக இன்று அறிவித்துள்ளது.
இதையடுத்து அசாமில் தேர்தல் களம் சூடுபிடிக்க் ஆரம்பித்துள்ளது..கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 126 தொகுதிகளில் போட்டியிட்டு 78 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா 120 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.