மோடி பிரதமராயிட்டாரு.. எப்போ பெட்டி படுக்கையை கட்டுவீங்க... ? மாஜி பிரதமரை குடைந்தெடுக்கும் பாஜக
பெங்களூர்: பாஜக அறுதி பெரும்பான்மை பலம் பெற்றால், அரசியலைவிட்டே விலகிவிடுவேன், மோடி பிரதமரானால் மாநிலத்தை விட்டே ஓடிவிடுவேன் என்று கூறிய முன்னாள் பிரதமர் தேவகவுடா இப்போது தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளார். எப்போது தேவகவுடா கர்நாடக மாநிலத்தை விட்டு போவார் என்று சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்படுகிறது.

அப்போவே அப்படித்தான்
மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே பாஜகவை பிடிக்காது. அவரது மகன் குமாரசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தியபோதும் மகன் மீது கோபித்துக் கொண்டார். நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவகவுடா, பாஜக அறுதி பெரும்பான்மைக்கு தேவைப்படும் 272 எம்.பிக்களை பெற்றுவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன். மோடி பிரதமரானால் நான் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவேன் என்று சூளுரைத்தார்.

புடிச்சிருந்தா பழகலாம்
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, "தேர்தலுக்கு பிறகு கர்நாடகாவை விட்டு எங்கே செல்வது என்று தேவகவுடா யோசிக்க வேண்டாம். குஜராத்துக்கு வாருங்கள். நானும் உங்கள் மகனைப்போலத்தான். எனவே எந்த மாதிரி வீடு வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள். பண்ணை வீடா, பங்களா வீடா எதுவாக இருந்தாலும் குஜராத்தில் வேண்டிய வசதி செய்து தருகிறேன்" என்றார்.

கோபத்தில் கொக்கரிப்பு
மோடியின் பேச்சால் மேலும் கோபமடைந்த தேவகவுடா, எனக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். என்னை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். எனக்கு மோடி தேவையில்லை. மோடிக்கு எந்த தகுதியும் கிடையாது. சாமானிய மனிதனைவிட மோடி கீழ்தரமானவர். என்னை பார்த்துக்கொள்ள அவர் யார்? என்று கோபத்தில் வார்த்தைகளை கொப்பளித்தார்.

திடீர் பல்டி
நிலைமை நினைத்ததைவிட வேறுமாதிரி போனதை உணர்ந்து கொண்ட தேவகவுடா தேர்தல் ரிசல்ட் வெளியானதும் அடித்தார் ஒரு அந்தர்பல்டி. மோடி சந்தேகத்திற்கிடமின்றி பெருவாரியான மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதில் அவர் தனது புத்திசாலித்தனத்தையும், திறமையையும் காண்பிக்க வேண்டும் என்று தேவகவுடா கூறினார்.

இப்போ என்ன செய்வீங்க..
இதோ இப்போது மோடி அறுதி பெரும்பான்மையுடன் பிரதமராக அறிவிக்கப்பட்டுவிட்டார். பதவியேற்பு விழா 26ம்தேதி நடைபெறுவது மட்டுமே பாக்கி. இதனால் சமூக வலைத்தளங்களிலும், உள்ளூர் பாஜகவிலும் தேவகவுடாவை கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர். எப்போது ஊரைவிட்டு போவீர்கள் என்று துளைத்து எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications