‘நான் மோடியின் தாமரை’: தமிழகம் முழுவதும் பாதையாத்திரை கிளம்பும் பாஜக!!
டெல்லி: கிராமங்கள் தோறும் பயணம்... ஏழை மற்றும் தலித் மக்களின் வீடுகளில் என்ன இருக்கிறது? என்ன இல்லை? என்று தெரிந்து கொள்ளவேண்டும். தலித் வீட்டில் ஒருவேளை கட்டாய உணவு உண்ணவேண்டும் என்று தமிழக பாஜகவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் தேர்தலின் போது காங்கிரஸ் துணைத் தலைவர் அடிக்கும் ஏழைப்பங்காளன் ஸ்டண்ட் போல இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். இது பாஜகவின் புது டிரெண்ட். 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலை சந்திக்க இப்போதிருந்தே பாஜக தயாராகி வருகிறது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
நகரங்களில் படித்த இளைய தலைமுறையினருக்கு நரேந்திர மோடியைப் பற்றி அறிமுகம் உண்டு. ஆனால் கிராமங்களில் பிரதமர் வேட்பாளாரைப் பற்றியும், பாஜகவின் தேர்தல் சின்னமாக தாமரையைப் பற்றியும் மக்களுக்கு அறிமுகப்படுத்த டிசம்பர் 1 முதல் பாதயாத்திரை செல்ல உள்ளனர் பாஜகவினர்.
12000 கிராமங்களுக்கு…
மக்களை நேரடியாக சந்திக்கத் திட்டமிட்டுள்ள பாஜகவினர் தமிழகம் முழுவதும் 12000 கிராமங்களுக்குச் செல்கின்றனர். டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை 22ல் நிறைவடைகிறது.
மோடியின் இமேஜ்
கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ள பாஜகவினர் பாதையாத்திரைக்கு திட்டமிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மக்களை சந்தித்து மோடி என்பவர் யார்? அவர் செய்த சாதனைகள் என்னென்ன என்பதை மக்களுக்குத் தெரிவிக்க உள்ளனர்.
கிராமங்களில் தங்குவது
ஒரு தலைவர் பத்து உறுப்பினர்கள் என பயிற்சி அளிக்கப்பட்டள்ளது. இவர்கள் கண்டிப்பாக ஒவ்வொரு கிராமத்திலும் ஒருநாள் இரவு தங்கவேண்டும். அங்கு மக்களுக்கு உள்ள பாதுகாப்பு குறைபாடு, பெண்களின் பிரச்சினைகளை அறிந்து வருவது அவசியம் என மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வளர்ச்சி
கடந்த 3 மாதத்திற்கு முன் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்றில் 2 சதவீதமாக இருந்த பாஜகவின் வளர்ச்சி 10 சதவீதமாக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற்ற இளம் தாமரை மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வீடு வீடாக பிரச்சாரம்
கிராமங்களில் பாதயாத்திரையாக வீடு வீடாக சென்று `எனது மோடி` `நமது தாமரை` என்ற ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும். மோடியின் சாதனைகள், வாஜ்பாய் சாதனைகள், காங்கிரசின் அவல நிலைகளை எடுத்து கூற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கிராமங்களில் கிளைகள்
கிராமங்களில் கிளை களை உருவாக்க வேண்டும். பூத் கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். வெளியில் இருந்து பெரும் கூட்டமாக செல்ல கூடாது. 10க்கும் குறைவானவர்கள் தான் செல்ல அனுமதிக்க வேண்டும். கிராமத்தில் உள்ளவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வரலாம்.
தாழ்த்தப்பட்டவர்களுடன் உணவு
பாத யாத்திரையாக செல்பவர்களுக்கு 4 தடவை டிபன் மற்றும் உணவு வழங்கப்படும். ஒரு முறை கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்டவர்களுடன் சாப்பிட வேண்டும்.
மக்களுக்கு நன்றி
கார், இரு சக்கர வாகனங்களில் `நான் மோடியின் தாமரை` என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும். கிராமங்கள் பாத யாத்திரை டிசம்பர் 1ம் தேதி துவங்கி 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மோடி ஏற்கனவே பிரதமராகி விட்டார். அதற்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளோம் என்று கூற வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஓய்வின்றி உழையுங்கள்
லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 10ம் தேதிக்குள் வந்துவிடும். இன்னும் 4 மாதமே உள்ளது. எனவே இனி நமக்கு ஓய்வு என்பது கிடையாது. ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன். மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் இந்த பாதயாத்திரை திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் மதிமுகவின் வழியை பின்பற்றத் தொடங்கியுள்ளது பாஜக.