இந்தியாவிலேயே சிறந்த அரசாக பாஜக ஆட்சி திகழ்ந்தது: மோடி
புனே: இந்தியாவிலே பாரதிய ஜனதா அமைத்த அரசுதான் சிறப்பானதாக இருந்தது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பாஜக நிர்வாகிகளிடையே மோடி பேசியதாவது:
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் போது மக்கள் தங்களுக்கு யார் சேவை ஆற்றுவார்களோ அவர்களைத் தேர்ந்தெடுப்பர். நாட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மாநிலக் கட்சிகள், பாஜக ஆண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆட்சியும் முன்வைத்த வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை இந்த நாடு பார்த்திருக்கிறது. அந்த திட்டங்கள் எப்படியெல்லாம் நடந்தன என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
மொரார்ஜி தேசாய் மற்றும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் விலைவாசி எப்படி கட்டுக்குள் இருந்தது என்பதை மக்கள் அறிவர். அதே நேரத்தில் காங்கிரஸ் அரசு அல்லது காங்கிரஸ் ஆதரவிலான அரசு அமைந்தபோதெல்லாம் எப்படி விலைவாசி உயர்ந்திருந்தது என்பதையும் மக்கள் அறிவர்.
கடந்த 9 ஆண்டுகாலமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பேசிய பேச்சையெல்லாம் பாருங்கள்...அதற்கு பதில் கேட்டால் கிடைக்காது. ஊடகங்கள் கூட அவர்களை நெருங்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை குற்றம்தான் சொல்வார்கள்.. பதில் சொல்ல மாட்டார்கள்.
ஆனால் 2014ஆம் ஆண்டு மக்களின் நல்லாசியுடன் மக்களுக்கு பாரதிய ஜனதா பதில் சொல்லும். 100 நாட்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்றார்கள்.. என்ன நடந்தது?
நான் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வருகிறேன். நல்ல மாற்றத்தை உணர முடிகிறது. நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சியில் நீடிக்க முடியாது. நாட்டின் பலாத்கார தலைநகராக டெல்லி மாறிவிட்டது என்றார்.
நரேந்திர மோடி பங்கேற்ற பாட்னா பொதுக் கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதால் புனேயில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.