தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண உதவியாக பாஜக சார்பில் ரூ.1 கோடி: அமித் ஷா அறிவிப்பு
டெல்லி: கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிவாரண உதவியாக ரூ.1 கோடி வழங்கப்படும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
தமிழகத்தையே புரட்டிப் போட்ட வடகிழக்கு பருவ மழைக்கு கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு சென்னை பெருநகரமே வெள்ளத்தால் மிதக்கிறது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களின் ஏரிகள் நிரம்ப அதன் உபரி நீர் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளில் திறந்துவிட சென்னையில் திரும்பிய திசையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னையை சுற்றியுள்ள பல ஏரிகள் நிறைந்து உபரி நீர் வெளியேறியதால், சென்னையிலும், சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் பல குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது.
இந்நிலையில், வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என அந்தக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையி்ல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் உடனடி நிவாரணமாக ரூ 1 கோடி வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications