"பெரியோர்களே.. தாய்மார்களே".. பிரச்சாரத்தில் ரோபோக்களை களமிறக்கிய பாஜக.. குஜராத் தேர்தலில் கலக்கல்!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பிரசாரத்திற்காக பாஜக ரோபோக்களை களமிறக்கியுள்ளது.
ஏற்கெனவே சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்கள் கட்சிகள் தங்கள் வாக்காளர்களை ஒன்றிணைக்க முயன்ற வரும் நிலையில் பாஜக இந்த புதி யுக்தியை கையில் எடுத்துள்ளது.
இந்த ரோபோ வீடு வீடாக சென்று பிரசாரத்தை மேற்கொள்ளும் என இதனை தயாரித்தவர் கூறியுள்ளார். இந்த தேர்தலுக்கு பல தொகுதிகளில் இது போன்ற ரோபோவை களமிறக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நம்பிக்கை
குஜராத் தேர்தல் நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் குஜராத் மாடல்தான் கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகளை ஒன்றிணைக்க பாஜகவுக்கு உதவியிருக்கிறது. இந்நிலையில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெரும் வெற்றி தோல்விகள் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும் என்பதால் பாஜக இதில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேபோல, காங்கிரசுக்கு கடந்த தேர்தலில் 41 சதவிகித வாக்குகள் கிடைத்ததால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.

ரோபோ
மாநிலத்தில் பாஜக-காங்கிரஸ்-ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருவதால் சமூக ஊடகங்கள் மூலம் பிரசாரத்தை கட்சிகள் தீவிரமாக்கியுள்ளன. இந்நிலையில்தான் பாஜக பிரசாரத்திற்கு ரோபோக்களை களம் இறக்கியுள்ளது. முதல் ரோபோவை பிரசாரத்தில் களமிறக்கிய பாஜக எம்எல்ஏ பங்கஜ் தேசாய், "இந்த ரோபோ எங்களுக்காக பிரசாரம் செய்யும். அதேபோல எங்கள் கட்சியின் சாதனைகள் மற்றும் வேட்பாளர்களை மக்களிடத்தில் அறிமுகம் செய்யும் விதமாக ரோபோவில் ஒரு டிஸ்பிளே இருக்கிறது. இதன் மூலம் வேட்பாளர்களை மக்கள் அறிந்துகொள்வார்கள். கட்சி பொதுக்கூட்டங்களிலும் இந்த ரோபோக்கள் களம் இறக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

என்னென்ன செய்யும்?
இந்த ரோபோவை மண்டல ஐடி செல் தலைவர் ஹர்ஷித் படேல் உருவாக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நாடியாட் சட்டப்பேரவை தொகுதியில் பிரசாரத்தை மேற்கொள்ள இந்த ரோபோ களம் இறக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோல மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கும். மட்டுமல்லாது கட்சியின் தலைவர்கள் உரைகள் இதில் ப்ளே செய்யலாம். பல வகையில் இது பிரசாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். கட்சி விருப்பப்படும் தொகுதிகள் அனைத்திலும் இந்த ரோபோக்கள் களமிறக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

வாக்கு வங்கி
கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பாஜக இந்த முறை எப்படியாவது மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு நல்ல செல்வாக்கு கிடைத்திருந்தாலும், இந்த தேர்தலில் ஆம் ஆத்மி அதனை உடைத்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். குஜராத்தில் சிறுபான்மையினர் மத்தியில் காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது. எனவு இந்த வாக்கு வங்கிகளை பிளவுபடுத்த சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதிகளில் ஆம் ஆத்மி காங்கிரசுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

பிரசாரம்
உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர்களை தேர்தல் பிரசாரத்தில் பாஜக களமிறக்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் சார்பில் மல்லிகர்ஜூன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி என பெயர் பட்டியல் நீண்டாலும், வீடு வீடாக சென்று பிரசாரத்தை மேற்கொள்வதையே கட்சி பெரிதும் நம்பியிருக்கிறது. மறுபுறம் இரண்டு கட்சிகளும் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் பிரசாரங்களை தீவிரமாக்கி வருகின்றன. இதற்கிடையில்தான் பிரசாரத்திற்கு பாஜக ரோபோக்களை களமிறக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications