இழுபறியிலுள்ள ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சிக்கு தயார்-'துண்டு போடும்' அமித்ஷா
டெல்லி: ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
2014ம் ஆண்டு பாஜகவின் வெற்றி வருடமாக அமைந்துவிட்டது. மத்தியில் நரேந்திரமோடி தலைமையில் ஆட்சியமைந்தது. ஹரியானா, மகாராஷ்டிராவிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இப்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்டிலும் பாஜகவுக்கு வெற்றிமுகமாக அமைந்துள்ளது.
ஜார்கண்ட்டில் பாஜக ஆட்சியமைத்து, தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றும். ஜம்முகாஷ்மீரில் பாஜகவின் நிலைமை முன்பைவிட மேம்பட்டுள்ளது. காங்கிரஸ் இல்லாத பாரதமாக நாட்டை மாற்ற வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை மக்கள் ஏற்றுள்ளனர். காங்கிரஸ் இரு மாநிலங்களிலுமே படுதோல்வியை அடைந்துள்ளது. இரு மாநிலங்களிலுமே 3வது நான்காவது இடங்களில்தான் காங்கிரஸ் உள்ளது.
ஆனால் பாஜக இரு மாநிலங்களிலுமே மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து இப்போது முக்கியமான இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஜார்கண்டில் கடந்த சட்டசபை தேர்தலில் 18 சீட்டுகளைதான் பெற்றோம். இம்முறை 41 தொகுதிகளை கைப்பற்றியுள்ளோம். ஜார்கண்டில் பல கட்சிகள் இணைந்து பாஜகவை தோற்கடிக்க முயன்றன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. மோடியின் பிரச்சாரமும், ஆட்சி முறையும்தான் இந்த வெற்றிகளுக்கு காரணம்.
ஜம்மு காஷ்மீரில் அதிகப்படியான வாக்கு சதவீதம் பெற்றுள்ளது பாஜகதான். அங்கு 23 சதவீத வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இந்த வெற்றிகளுக்கு பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜம்மு காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியமைக்கவும், அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு அளிக்கவும் பாஜக தயாராகவே உள்ளது. ஆட்சிக்கு உள்ளிருந்து ஆதரவு என்றாலும் சரி, வெளியில் இருந்து ஆதரவு என்றாலும் சரி எதற்குமே பாஜக தயாராக உள்ளது. இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. பாஜகவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. எனவே மக்கள் ஜனநாயக கட்சியைதான் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுப்பார். அப்போது அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்க முன்வருகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். மக்கள் ஜனநாயக கட்சி, தற்போதைய ஆளும் கட்சியான உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பப்போகிறதா அல்லது பாஜகவுடனா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இருப்பினும் கூட்டணிக்கு தயார் என்று முதலிலேயே துண்டை போட்டு சீட்டை பிடித்து வைத்துள்ளார் அமித்ஷா என்பது குறிப்பிடத்தக்கது.