ராகுலுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை: பாஜக தாக்கு
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் வெளிநாட்டில் பொழுதை கழிப்பதை விட்டுவிட்டு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி தலைநகரில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
மே மாதத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. பிரதமர் பி.ஆர். வேலை பார்க்கிறார். அவர் பி.ஆர். ஸ்டண்டுகளை செய்கிறார். அதனால் ஒரு பலனும் இல்லை. இந்த வேலையை அவர் எப்பொழுது நிறுத்திவிட்டு நிஜமான வேலையை துவங்குவார் என மக்கள் கேட்கிறார்கள். மோடி ஏழைகளை புறக்கணித்துவிட்டு தொழில் அதிபர்களை தான் கவனிக்கிறார் என்றார்.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறுகையில்,
நாட்டில் என்ன நடக்கிறது என்பதே ராகுல் காந்திக்கு தெரியவில்லை. அவருக்கு பயிற்சி தேவை என்று நினைக்கிறேன். ராகுலுக்கு பொது சேவைக்கும் பி.ஆர். வேலைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மக்கள் மோடியின் பணியை பாராட்டுகிறார்கள். ஏழை மக்களுக்காக 5 கோடி வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. புதிய கேஸ் இணைப்புகளுக்கு மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு சென்று பொழுதை கழிப்பதை நிறுத்திவிட்டு இங்கு தங்கி என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும் என்றார்.