ராஜஸ்தானின் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு வரவேற்பு!
டெல்லி: ராஜஸ்தான் அரசு ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மாற்றி பொருளாதார அடிப்படையில் பின் தங்கியோர் என்ற புதிய பிரிவை உருவாக்கி 14% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்தேகர் வரவேற்றுள்ளார்.
ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற இந்துத்துவா அமைப்புகளின் குரலை ஏற்று ராஜஸ்தானில் இடஒதுக்கீட்டு முறையில் 'பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோர்' என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் அடங்குவர். இவர்களுக்கு 14% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை ராஜஸ்தான் அரசு சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்தேகர் கூறியதாவது:
முற்படுத்தப்பட்ட ஜாதியினரையும் உள்ளடக்கிய 'பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோர்' என்ற அம்சம் வரவேற்கத்தக்கது. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நடைமுறையில் உள்ள 50% இடஒதுக்கீட்டில் எந்த ஒரு மாற்றத்தையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.
இந்த 50% இடஒதுக்கீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இதற்கு அப்பால்தான் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது. ஆகையால் இரண்டும் வெவ்வேறான பிரச்சனை.
இவ்வாறு ஜவ்தேகர் கூறியுள்ளார்.