சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட எதிர்க்கட்சிகள்.. பாஜக படு குஷி!
Recommended Video
டெல்லி: எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு தானாக ஆதாயம் கிடைக்கப் போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இரு தினங்கள் முன்பாக, தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். 10 நாட்களுக்குள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேட்டுக்கொண்டார்.
ஆனால் தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட இரண்டே நாட்களில் அதாவது 20 ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என்று சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
இன்பம் இல்லை அதிர்ச்சிதான்
அதை காங்கிரசே கூட எதிர்பார்க்கவில்லை. கடந்த மார்ச் மாதம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தபோது ஏற்க மறுத்த சபாநாயகர் இப்பொழுது ஏற்றுக்கொண்டதுடன் உடனடியாக வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது ஒருவகையில் எதிர்க்கட்சிகளுக்கு இன்ப அதிர்ச்சிதான். ஆனால் இன்பம் என்பதற்கு பதிலாக வெறும் அதிர்ச்சி மட்டுமே இன்று எதிர்க்கட்சிகளுக்கு பரிசாக கிடைக்கப் போகிறது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
பாஜக சாதுர்யம்
சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்பார்களே அதுபோன்ற ஒரு வேலையை தான் எதிர்க்கட்சிகள் செய்துள்ளன. பாரதிய ஜனதா கட்சி மிகவும் சாதுரியமாக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்ள உள்ளது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உள்ள எண்ணிக்கை அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மோடி அரசு எளிதாக வென்று விடும்.
வெற்றி வித்தியாசம்
இதைத்தான் பாரதிய ஜனதா கட்சி எதிர்பார்க்கிறது. 37 எம்பிக்களை கொண்ட அதிமுக 20 எம்பிக்களை கொண்ட பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வெற்றி வித்தியாசம் என்பது அதிகரித்து காணப்படும். இது பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க பயன்படும். மேலும் பாரதிய ஜனதா கட்சியினர் மூன்றுமணிநேரம் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.
பாஜகவுக்கு கூடுதல் வாய்ப்பு
வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது என்ற போதிலும் விவாதத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான வாய்ப்பாக தங்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தை பயன்படுத்தலாம், என்பது எதிர்க்கட்சிகளின் திட்டமாக இருந்தது ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்கு 3 மணி நேரம் 33 நிமிடங்களும், எதிர்க் கட்சி அந்தஸ்திலுள்ள காங்கிரசுக்கு 39 நிமிடங்களுமே ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இதிலும் பலனடையப் போவது பாஜகதான்.
மோடிக்கு பிடித்த வேலை
பிரதமர் மோடி தனக்கு மிகவும் பிடித்த வேலையை.. அதாவது பேசுவது, உரை நிகழ்த்துவது.. அதைத்தான் இன்று செய்ய உள்ளார். விவாதத்திற்கு மோடி பதிலளித்து பேசும்போது, அரசின் சாதனைகள் என்ற பெயரில் ஒரு நீண்ட பட்டியலை அவர் வாசிக்க கூடும். எங்கள் ஆட்சிக்கு போதிய செல்வாக்கு இருந்தும் கூட ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்து வருகின்றன. இதற்கு நம்பிக்கை இல்லாத தீர்மானம் ஒரு சாட்சி என்று மோடி பேசக்கூடும். இது மக்கள் மத்தியில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு கிடைக்க வழி செய்யும்.
எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு
தங்களுக்கு போதிய எம்பிக்கள் பலம் உள்ளது என்று சோனியா காந்தி தெரிவித்திருந்த நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி அரசு வெற்றி பெறுவது என்பது தார்மீக அடிப்படையிலும் மக்கள் மன்றத்திலும் காங்கிரஸிற்கு பின்னடைவாகவே சென்று விடும். இன்னும் ஓர் ஆண்டில் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டன என்று தான் சொல்ல வேண்டும்.