பாஜக ஆளும் திரிபுராவில் அதிகரித்த சிறுமிகளுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள்.. திரளும் எதிர்க்கட்சிகள்
அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன.
அம்மாநிலத்தின் அமைச்சரின் மகன் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் மேலும் 2 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து பாஜக அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
5 கொடூரர்கள்.. ஆட்டோவில் பயணித்த பெண்ணை கடத்தி.. கூட்டு பாலியல் பலாத்காரம்.. குஜராத்தில் கொடுமை
திரிபுரா
திரிபுரா மாநிலத்தின் உனகோடி மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் அம்மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பகாபன் தாஸின் மகன் சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து அமைச்சரின் மகன் தலைமறைவாகியுள்ளார்.
பஞ்சாயத்து தலைவர்
எனவே உடனடியாக அவரை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மற்றொரு விவகாரத்தில் கல்யாண்பூரின் துவ்ரிகாபூர் பஞ்சாயத்தின் துணைத் தலைவரான பிதான் பிஹாரி தத்தா பழங்குடியின பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பாஜக பிரமுகர்
அதேபோல மற்றொரு வழக்கில் பாங்குமாரி பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக உள்ளூர் பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தை வெளியில் சொல்லாம் இருக்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளார். ஆனால், சிறுமிக்கு ரத்த போக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். பின்னர் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போக்சோ வழக்குகள்
புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவையெல்லாம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 48 மணிநேரத்தில் இவை பதிவாகியுள்ளன. மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1 வாரத்தில் மட்டும் 4 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.