"பாஜக தலைவர்களுக்கு முஸ்லிம் மருமகன்கள்".. கொளுத்தி போட்ட காங்கிரஸ் "தலை".. பெரும் சர்ச்சை
போபால்: பாஜக தலைவர்கள் பலர் முஸ்லிம்களை தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து மருமகன்களாக ஆக்கிக் கொள்வதாகவும், வெளியே அரசியலுக்காக முஸ்லிம்களை எதிர்ப்பது போல நடிப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் தேவ்ராஜ் சிங் படேல் தெரிவித்தார்.
தேவ்ராஜ் சிங் படேலின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், பாஜகவினர் அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பாஜகவினரை இழிவுப்படுத்தி பேசியதற்காக தேவ்ராஜ் சிங் படேலும், காங்கிரஸும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

அதிகரிக்கும் வெறுப்பு பேச்சுகள்
நாட்டில் சமீபகாலமாக முஸ்லிம் மதத்தினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. இது, இரு சமூக மக்களிடையே ஒருவித பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சில பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் இதுபோன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. உதாரணமாக, நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் நுபுர் சர்மா உள்ளிட்டோர் கூறிய கருத்து, முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் சரச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

'முஸ்லிம் மருமகன்கள்'
இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் தேவ்ராஜ் சிங் படேல், பள்ளி விழா ஒன்றில் இன்று கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்து - முஸ்லிம் மதங்களின் பெயரில் பாஜகவினர் அரசியல் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவது எல்லாம் ஒரு வகை நாடகம் ஆகும். பாஜக தலைவர்கள் பலர் தங்கள் மகள்களையே முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை மருமகன்களாக ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.

'வெளிவேஷம் போடும் பாஜக'
ஆனால், மதத்தை வைத்து அரசியல் செய்வதற்காக அவர்கள் வெளியில் முஸ்லிம்களை எதிர்ப்பது போல வேஷம் போடுகின்றனர். ஒருபுறம், முஸ்லிம் தீவிரவாதிகள் என பாஜகவினர் பேசுகின்றனர். மறுபுறம், முஸ்லிம்களை மருமகன்களாக அவர்கள் ஆக்கிக்கொள்கின்றனர். எப்படி உங்கள் (பாஜகவினர்) மருமகன்கள் தீவிரவாதிகளாக இருப்பார்கள்? இரு சமூக மக்கள் இடையே சண்டையை உருவாக்குவதற்காக பாஜக மத அரசியலை செய்து வருகிறது. இவ்வாறு தேவ்ராஜ் சிங் படேல் பேசினார்.

பாஜக கடும் கண்டனம்
இதனிடையே, தேவ்ராஜ் சிங் படேலின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தக் கருத்துக்கு பாஜகவும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் துர்கேஷ் கேஸ்வானி கூறுகையில், "தேவ்ராஜ் சிங் பாஜக குறித்து மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார். மேலும், ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை வைத்து அவர் அரசியல் செய்து அதன் மூலம் ஆதாயம் அடைய பார்க்கிறார். காங்கிரஸின் இந்தப் பொறுப்பற்ற பேச்சுகளால் 400 மக்களவைத் தொகுதியில் 40-ஐ மட்டும் பெற்றிருக்கிறது. இன்னும் இதுபோன்ற பேச்சுகள் தொடர்ந்தால் அக்கட்சி பூஜ்ஜியத்துக்கு சரிந்துவிடும். பாஜகவினரை இழிவாக பேசியதற்காக தேவ்ராஜ் சிங் படேலும், காங்கிரஸும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications