இன்று பாஜக தேசிய செயற்குழு கூட்டம்: 272 இடங்களை கைப்பற்ற இலக்கு
டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 272 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.
மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே இருப்பதால் தேர்தல் வியூகம், கூட்டணி அமைப்பது தொடர்பாக நாடுமுழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றன.
தேசீய கட்சியான பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்து முழு வீச்சில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
தேர்தல் வியூகம்
இன்று தேசிய செயற்குழு கூட்டமும் நாளை முதல் இரண்டு நாட்கள் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டமும் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் தற்போதுள்ள அரசியல் சூழல், தேர்தலுக்கான பிரச்சார உக்தி, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
எல்.கே. அத்வானி-நரேந்திரமோடி
காங்கிரசுக்கு பின்னடவை ஏற்படுத்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய கவுன்சில் கூட்டத்தில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இவர்களைத் தவிர கட்சியின் மாவட்ட, மாநில, தேசிய நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர்.
மக்களவைத் தேர்தலுக்கு கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தயார்படுத்தும் விதத்தில் இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
உயர்மட்டக்குழு கூட்டம்
முன்னதாக கட்சியின் உயர்மட்டக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 3 நாட்கள் நடைபெறும் செயற்குழு தேசி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் நிதி
நாடு முழுவதும் பாரதீய ஜனதா தேர்தல் நிதி திரட்டுவது பற்றியும் ஆலோசனை நடந்தது. மோடி பிரதமர் ஆக நிதி தாருங்கள் என்று பாரதீய ஜனதா பல்வேறு மாநிலங்களில் நிதி திரட்டும் பணியை தொடங்கி விட்டது. டெல்லியில் சில நாட்களுக்கு முன் பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் நிதி வழங்கி தொடங்கி வைத்தார்.
ஒரு மாத சம்பளம் நிதி
அடுத்ததாக தேர்தல் நிதியாக பஞ்சாயத்து உறுப்பினர் முதல் எம்.பி.வரை உள்ள பாரதீய ஜனதா நிர்வாகிகளிடம் இருந்து 1 மாத சம்பளத்தை நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. நாடு முழுவதும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பஞ்சாயித்து உறுப்பினர்களாக, தலைவராக, எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களாக, எம்.பி.க்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து 1 மாத சம்பளம் தேர்தல் நிதியாக திரட்டப்படுகிறது.
குவியும் நன்கொடை
பாரதீய ஜனதா நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப் படுத்தி தேர்தல் நிதி திரட்டும் பணியை 3 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆன்லைன் மூலம் நன்கொடைகள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு 3 நாட்களில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பொது மக்கள் தாமாகவே முன்வந்து தேர்தல் நிதி வழங்குகிறார்கள். எவ்வளவு பேர் எவ்வளவு நிதி வழங்கியுள்ளார்கள் என்ற விவரம் இப்போது கணக்கிடப்படவில்லை என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதன்சு திரிவேதி தெரிவித்துள்ளார்.
அரசியல் பிரச்சினைகள்
மேலும் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முக்கியமாக தேசிய அளவில் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பற்றியும், ஊழல், விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்வோம் என்பதை மக்களிடம் எடுத்துச்சொல்லவும் முடிவு எடுக்கப்பட்டது.