உ.பி. லக்கிம்பூர் பாணியில் ஹரியானாவிலும் கொடூரம்- போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றிய பாஜக எம்.பி!
சண்டிகர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூர் பாணியில் ஹரியானாவிலும் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தப்பட்ட போராட்டத்திலும் பா.ஜ.க. எம்.பி.யின் கார் பாய்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது. பாஜக எம்.பி.யின் கார் மோதி விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 10 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டம் விரிவடைந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் அமைதியாக கறுப்புக் கொடி பேரணி நடத்திய விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராதான் இந்த கொடூரத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த மோதல்களில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.
அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக வழக்கு.. எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட்!
உச்சநீதிமன்றம் உத்தரவு
லக்கிம்பூரில் 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து லக்கிம்பூர் படுகொலை வழக்கை விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையில், உத்தரப்பிரதேச மாநில அரசு நாளைக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மகன் மீது நடவடிக்கை
மேலும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும்; அவரது மகன் ஆஷிஸ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறும் நிலையில் ஆஷிஸ் மிஸ்ரா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலைமை உருவாகி உள்ளது.
ஹரியானாவிலும்
லக்கிம்பூர் பதற்றம் தணிவதற்குள் ஹரியானாவிலும் அதேபாணியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹரியானாவின் நரைன்காரில் மாநில அமைச்சர் மூல்சந்த் சர்மா பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நிகழ்ச்சி முடிந்த போதும் பெருந்திரளாக விவசாயிகள் கூடியிருந்தனர்.
காரை பாயவிட்ட பாஜக எம்.பி
அப்போது குருஷேத்திரா தொகுதி பா.ஜ.க. எம்.பி. நயாப் சைனி, போராடிய விவசாயிகள் கூட்டத்துக்குள் காரை ஓட்டினார். இதனால் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர். பாஜக எம்.பி. நயாப் சைனியின் கார் மோதியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், எம்.பி. நயாப் சைனிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.