அத்வானியின் எமர்ஜென்சி பேச்சு: பாஜகவில் தீ.. எந்த நேரமும் எரிமலை வெடிக்கலாம்- லாலு
டெல்லி: பாஜக கட்சியில் எதுவும் நடக்கலாம் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், " பாஜகவில் தீப்பற்றி எரிகிறது. அக்கட்சியில் அடுத்த என்ன நிலநடுக்கம் நேரிடும் அல்லது எந்த எரிமலை வெடித்து சிதறும் என யாருக்கும் தெரியாது.

பாஜகவின் மிக மூத்த தலைவரான அத்வானி, நாட்டில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார். அக்கட்சியின் பிறத் தலைவர்கள் அவரது காலில் விழுந்தபோதிலும், நாட்டில் தனி நபர் ஆட்சி கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். இதிலிருந்து அவர் யாரை சொல்கிறார் என நீங்கள் புரிந்து கொள்ளலாம். பாஜகவில் நிலவும் இந்த மோதல், விரைவில் வெளி உலகுக்கு தெரியவரும்.
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயும் பூசல் நிலவுகிறது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹாவின் பெயரை பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி பரிந்துரைத்ததில் இருந்து இதை தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல், லோக்ஜன சக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானும் பீகார் முதல்வராக விரும்புகிறார். அதனால்தான், பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்படி, பாஜகவுக்கு நாங்கள் சவால் விடுக்கிறோம்.ஆனால், பாஜக இன்னமும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களிடமும், பரஸ்பரம் அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவரையே முதல்வராக்கப் போவதாக தெரிவித்து ஏமாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.
பீகார் மாநிலமானது சோஷலிஸ்டுகள், புனிதர்களின் பூமியாகும். பாஜகவாலும், ஆர்எஸ்எஸ் அமைப்பாலும், நாடு முழுவதும் மதவாதம் பரப்பப்பட்டு வருகிறது. பீகாரில் பாஜக தடம்பதிக்க விரும்புகிறது. ஆனால், நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பாஜக தோன்றிய இடமான நாகபூரிக்கே அக்கட்சியை திருப்பி அனுப்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications