முதல்கட்ட தேர்தலிலேயே இத்தனை களேபரங்கள்.. மே வங்கத்தில் லீக்கான ஆடியோக்கள்... பரபரப்பு பின்னணி
கொல்கத்தா: பாஜகவுக்குச் சாதகமாகவும் ஒரு தலைப்பட்சமாகவும் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டி வரும் திரிணாமுல் காங்கிரஸ், இது தொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நேற்று முதல்கட்டமாக 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடையும் முன்னரே பல குற்றச்சாட்டுகளை இரண்டு கட்சிகளும் மாறி மாறி சுமத்திக்கொண்டன.
மேற்கு வங்க தேர்தலில் மாதுவா இன மக்களின் வாக்காளர்களைக் கவரவே வங்கதேசத்திற்கு நரேந்திர மோடி சென்றதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. மேலும், மோடியின் செயல்பாடுகள் முற்றிலுமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் இருப்பதால் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரிணாமுல் குற்றஞ்சாட்டியது.
பாஜக வெளியிட்ட ஆடியோ
இந்நிலையில் பாஜக ஆடியோ ஒன்றை வெளியிட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த புரோலோய் பால் என்பவரிடம் மம்தா பானர்ஜி உதவி கேட்பது போல அமைந்திருந்தது. அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி கேட்கிறார். ஆனால், அதற்கு புரோலோய் பால் ஒப்புக்கொள்ளவில்லை. மேற்கு வங்க முதல்வரே உதவி கேட்கும் இந்த ஆடியோ திரிணாமுல் காங்கிரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
திருப்பி அடித்த திரிணாமுல் காங்கிரஸ்
தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மம்தாவின் உரையாடலில் எவ்வித விதிமீறலும் இல்லை. ஆனால் சில மணி நேரங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலுக்கு ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தது. இரண்டு பாஜக தலைவர்கள் பேசுவது போல இருக்கும் அந்த வீடியோ எதிர்க்கட்சியை மட்டுமல்ல, தேர்தல் ஆணையமும் பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்ற திரிணாமுல் கட்சியின் குற்றச்சாட்டிற்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது.
பூத் ஏஜென்டிற்கு கூட ஆள் இல்லை
மேற்கு வங்க பாஜக தலைவர்களில் ஒருவரான ஷிஷிர் பஜோரியா மற்றும் முகுல் ராய் இருவரும் பேசும் அந்த ஆடியோவில், தேர்தல் ஆணையத்தில் எழுப்பப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, மாநிலத்தில் எங்கு வசிக்கும் வாக்காளரும்கூட எங்கு வேண்டுமானாலும் பூத் ஏஜென்ட்டாக இருக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பல இடங்களில் பாஜகவால் பூத் ஏஜென்ட்டுகளை அமைக்க முடியாது என்றும் முகுல் ராய் கூறுகிறார்.
பாஜகவுக்கு சாதகம்
வழக்கமாக ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் உள்ளூர் வாக்காளரே அப்பகுதியில் பூத் ஏஜென்ட்டாக இருப்பார். ஆனால், கடந்த வாரம் தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி மாநிலத்தில் எங்கு வசித்தாலும் அவர் பூத் ஏஜென்ட் இருக்கலாம் என்ற புதிய உத்தரவைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. பாஜகவுக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காகவே தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. அந்த குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ஆடியோவும் அமைந்துள்ளது. இது மே வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.