ராஜபக்சே தொடங்கி வைக்கும் கொழும்பு மாநாட்டில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் பங்கேற்பு!
டெல்லி: கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜக தேசியப் பொதுச்செயலாளரும் தமிழக மேலிட பொறுப்பாளருமான முரளிதரராவ், பாஜக வெளிநாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜய் ஜாலி ஆகியோர் நேற்று இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று முதல் 21-ந் தேதி வரை ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இன்று நடைபெறும் தொடக்க விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் பாஜக சார்பில் முரளிதரராவ், விஜய் ஜாலி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக அவர்கள் இருவரும் நேற்று மாலை கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.
இம் மாநாட்டில் பாஜக தலைவர்கள் பங்கேற்கும் தகவலை அவர்கள் கொழும்பு புறப்பட்டுச் சென்ற பிறகே பாஜக வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்காக ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு அந்நாட்டுடன் நல்லுறவைப் பேணி வருகிறது.
டெல்லியில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்றதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், பாஜக தலைவர்களின் கொழும்பு பயணம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications