ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பு: இத்தாலி நீதிமன்ற தீர்ப்பை காட்டி பாஜக குற்றச்சாட்டு!
டெல்லி: ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்புள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டியதால் ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது.
ரூ.3700 கோடி மதிப்பிலான, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அந்நிறுவன முன்னாள் நிர்வாக அதிகாரி புரூனோ ஸ்பானோவுக்கும் கியூசெப்பி ஓர்ஸிக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் பக்கம் 93, 204-ல் சோனியாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பாஜக சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இத்தாலி நீதிமன்ற தீர்ப்பில் ரூ.250 கோடிக்கு லஞ்சம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தை பெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரிடம்தான் பேரம் நடந்துள்ளது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக பாஜகவினர் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. மீனாட்சி லெகி நேற்று அவையில் வலியுறுத்தினார். இதே விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை யில் விவாதம் நடத்தகோரி பாஜக எம்.பி.க்கள் சுப்பிரமணியன் சுவாமி, பூபேந்திர யாதவ் ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இன்று ராஜ்யசபா தொடங்கியதும், சுப்பிரமணியன் சுவாமி, இந்த விவகாரம் குறித்து பேச ஆரம்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள், குலாம் நபி ஆசாத் தலைமையில் தர்ணா நடத்தியதால் அமளி நிலவியது.
சோனியாகாந்தி இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியது: பாஜக ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கை விசாரித்து முடித்திருந்தால் உண்மை வெளியே வந்திருக்கும். இந்த ஊழலில் எனக்கு தொடர்பு இல்லை. எனவே எனக்கு பயமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications