ஆந்திரா: தெலுங்குதேசம்- பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி
ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேசம்- பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், உடன்பாடு ஏற்படாததால், மூத்த தலைவர்களுடன் விவாதிக்க டெல்லி விரைந்துள்ளார்.
ஆந்திரா 2 ஆக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து சீமாந்திரா, தெலங்கானா பகுதிகளில் தனித் தனி கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயன்று வருகிறது.
தெலங்கானாவில் தங்களுக்கு பாதிக்கு பாதி தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பாஜக பிடிவாதம் பிடிப்பதால் தெலுங்கு தேசம், பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தெலுங்கு தேச கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலோடு சட்ட பேரவை தேர்தலும் நடைபெறுவதால் தொகுதி பங்கீட்டில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,
‘தெலங்கானாவில் 119 சட்டமன்ற தொகுதிகளில் 60 தொகுதிகளையும், 17 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளையும் கேட்டு பிடிவாதம் பிடிக்கிறது.
பாஜக கேட்கும் தொகுதிகள் ஏறக்குறைய 50 சதவீதம் ஆகும். அதனால் பாஜக கேட்ட தொகுதிகளை ஒதுக்குவது சாத்தியமில்லை. பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது‘ என்றார்.
தெலுங்கு தேசம் கட்சி 11 லோக்சபா தொகுதிகளிலும் 72 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட தீவிரமாக உள்ளது. அதே சமயம் பாஜக, ஆந்திர மாநிலத்தலைவர் கிருஷ்ணா ரெட்டியை முதல்வராக்கவேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறது. ஆனால் சந்திரபாபு நாயுடு இவற்றை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கூட்டணி குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தெலுங்கு தேச எம்பிக்கள் சத்தியநாராயணா, ரமேஷ் ஆகியோர் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையில், மோடியுடன் சந்திரபாபு நாயுடு பேச உள்ளதாக கூறப்படுகிறது.