தேர்தலே நடைபெறவில்லை.. பதவியேற்புக்கு இப்போதே நாள் குறித்த எடியூரப்பா.. மோடிக்கும் அழைப்பு
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபைக்கு நாளைதான் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 17ம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளதாக அறிவித்துள்ளார் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா.
பாதாமி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து களமிறங்கியுள்ள பாஜகவின் ஸ்ரீராமலுவை ஆதரித்து நேற்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எடியூரப்பா பகிரங்கமாகவே இதை அறிவித்தார்.
கர்நாடகாவில் பிரதமர் மோடி பிரசாரம் செய்த பின் அனைத்து இடங்களிலும் பாஜக அலை எழுந்துள்ளது. நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. 130 தொகுதிகளையாவது வெல்வது உறுதி.
தேர்தல் முடிவுக்குப் பிறகு பாஜக எப்படிப்பட்ட பலமான கட்சி என்பதை மற்ற கட்சிகள் புரிந்து கொள்ளும். வரும் 17ம் தேதி, பெங்களூரிலுள்ள, கண்டீரவா விளையாட்டு அரங்கில் முதல்வராக பதவியேற்பேன். பிரதமர் மோடிக்கும் விழாவிற்கான அழைப்பை விடுத்துள்ளேன்.
அரசியல் லாபத்துக்காக, லிங்காயத்து சமுதாயத்தை உடைத்த அவப்பெயர், சித்தராமையாவுக்கு கிடைத்துள்ளது. சித்தராமையாவின் இந்த செயலை லிங்காயத்து சமுதாயம் என்றுமே மன்னிக்காது. சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளிலும் முதல்வர் சித்தராமையா தோல்வியடைவார். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.