யு.எஸ். புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது- மோடியை சந்தித்தார் அமெரிக்க தூதர் நான்சி!
காந்திநகர்: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெல் இன்று சந்தித்து பேசினார்.
2002-ல் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்கா செல்ல விசா மறுத்து வந்தது. 2005 ம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்காக மோடி விசாவிற்கு விண்ணப்பித்தார். ஆனால் குஜராத் கலவரத்தை காரணம் காட்டி விசா மறுக்கப்பட்டது.
தற்போது லோக்சபா தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீதான நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது அமெரிக்கா. இதைத் தொடர்ந்து மோடியை சந்திக்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்தது.
இது தொடர்பாக மோடியும் சில நிபந்தனைகளை விதித்திருந்தார். மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும், 2002 சம்பவங்கள் பற்றி விவாதிக்க கூடாது, காந்திநகரில்தான் சந்திப்பு நடைபெற வேண்டும் என்றும் மோடி தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதனை ஏற்று இன்று குஜராத்தின் காந்திநகரில் நரேந்திர மோடியை நான்சி பாவெல் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் மூலமாக அமெரிக்கா கடைபிடித்து வந்த மோடி புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது.