இடைத்தேர்தல் முடிவுகளால் உற்சாகம்! புதுத்தெம்புடன் 4 மாநில தேர்தலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!
டெல்லி: சட்டசபை இடைத்தேர்தல் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் விரைவில் நடைபெற உள்ள 4 மாநில சட்டசபை தேர்தலுக்கும் வியூகம் வகுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறது காங்கிரஸ்.
லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது காங்கிரஸ் கட்சி. வெறும் 44 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது காங்கிரஸ்.
கலகக் குரல்
இனி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலமே இல்லை என்று கூறப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியிலும் அதன் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலுக்கு எதிராக கலகக் குரல்கள் வெடித்தன.
18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
இந்த நிலையில்தான் கடந்த 21-ந் தேதியன்று பீகார், மத்தியபிரதேசம், பஞ்சாப் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இதில் 10 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக 8 இடங்களைத்தான் வெல்ல முடிந்தது.
பகையை மறந்த தலைவர்கள்
பீகாரில் லோக்சபா தேர்தலில் மரண அடி வாங்கியதால் 20 ஆண்டுகால பகையை மறந்து நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் கை கோர்த்தனர். இவர்களுடன் காங்கிரஸும் இணைந்து கொள்ள மதச்சார்பற்ற கூட்டணி உதயமானது. பீகாரில் 10 தொகுதிகளில் 6 ஐ இந்த மதச்சார்பற்ற கூட்டணி கைப்பற்றியது.
பெல்லாரியில் காங்கிரஸ் கொடி
இதேபோல் கர்நாடகாவில் பாஜகவின் கோட்டையான பெல்லாரியை வென்றது காங்கிரஸ். இப்படி அடுத்தடுத்து இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஒரே ஒரு வழிதான்
அதே நேரத்தில் மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல்களிலும் 'மதச்சார்பற்ற சக்திகளை' ஒருங்கிணைத்தால்தான் வெல்ல முடியும் என்பதுதான் காங்கிரஸ் முன் இருக்கும் ஒரே வழி.
மெகா கூட்டணி அமையுமா?
இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து மெகா கூட்டணி அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது காங்கிரஸ். வழக்கம்போல பெரியண்ணன் பாணியில் காங்கிரஸ் நடந்து கொள்ளுமா? அல்லது மதச்சார்பற்ற சக்திகளை அரவணைத்து வெற்றியைப் பெறுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.