மக்களே.. முதல்ல.. அரசியல்வாதிகளை கொளுத்துங்க!!.சர்ச்சை பேச்சில் சிக்கிய உ.பி. அமைச்சர்
அலிகார்: இந்து,முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை கொளுத்துங்கள் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பார் தெரிவித்த கருத்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் சுகல்தேவ் பகுஜன் சமாஜ் என்ற கட்சி இடம்பெற்றிருக்கிறது. அதன் தலைவர் ராஜ்பார். ஆளும் கூட்டணியில் இருப்பதால் அவரும், அவர் பேசும் பேச்சும் எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம்.
இப்போது அவர் புதியதாக ஒரு கருத்தை கூறி அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார். அந்த வகையில், மத ரீதியாக வேற்றுமையை உண்டுபண்ணி மக்களை தூண்டி, கலவரத்தை ஏற்படுத்தும் அரசியல் வாதிகளை மக்களே எரித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
அலிகாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் தான் அவ்வாறு இதுபோன்று பேசியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: இதுவரை இந்து, முஸ்லிம் கலவரத்தில் எந்த ஒரு அரசியல் பிரமுகராவது உயிரிழந்துள்ளாரா? எந்த அரசியல் பிரமுகரும் மதக்கலவரத்தில் ஏன் இறப்பதில்லை?
மத ரீதியாக வேற்றுமையை உண்டு பண்ணி மக்களைத் தூண்டிவிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை மக்களே எரிக்க வேண்டும்.மக்களே.. நீங்க அவ்வாறு செய்ய வேண்டும்.
அப்போதுதான் இனி நாம் கலவரத்தில் யாரையும் எரிக்கக் கூடாது என்பதை அந்த அரசியல்வாதிகள் புரிந்துகொள்வார்கள்.
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகளே... இந்திய அரசியல் சாசனத்தின்படி தேர்தலில் ஓட்டு போடுபவர்கள் இந்தியர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் பேசிய ராஜ்பார், "பாஜக விரும்பவில்லை என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகிக் கொள்ள தயாராக இருக்கிறது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.