குடியரசு தலைவர் தேர்தல்.. கோபத்திலுள்ள சிவசேனை காலை வாரினால் பாஜக வேட்பாளர் தோல்வி நிச்சயம்?
மும்பை: பாஜகவின் குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தலைமை, பல்வேறு பெயர்களை பரிசீலித்து ராம்நாத் கோவிந்த் பெயரை இறுதி செய்துள்ளது. ஆனால் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவோ, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அல்லது, விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகிய இருவரில் ஒருவரைத்தான் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தது.
எனவே, பாஜகவின் ராம்நாத் கோவிந்துக்கு சிவசேனை ஆதரவு அளிப்பது சந்தேகம்.
அம்பேத்கர் பேரன்
எதிர்க்கட்சிகள் சார்பில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரை குடியரசு தலைவர் வேட்பாளராக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே சிவசேனை அவருக்கு ஆதரவு வழங்க வாய்ப்புள்ளது. அவரும் தலித் என்பதோடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பது அதற்கு காரணம்.
இன்று ஆலோசனை
தலித் என்பதற்காக, வாக்கு வங்கிக்காக ராம்நாத் கோவிந்த் பெயரை பாஜக தேர்ந்தெடுத்திருக்குமானால் அதற்கு சிவசேனை ஆதரவு அளிக்காது என அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே நேற்று கூறியிருந்தார். இன்று அக்கட்சி இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.
சிவசேனை பலம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனை, வாக்குகளை மாற்றிப்போட்டுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் பாஜகவுக்கு உள்ளதா, அப்படி மாற்றிப்போட்டாலும் பாஜக வேட்பாளர் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா என்பதை அறிவதற்கு முன்பாக சிவசேனையின் பலம் தெரிந்திருக்க வேண்டும்.
நல்ல மதிப்பு
சிவசேனையிடம் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அடிப்படையில் அவர்களின் வாக்கு எண்ணிக்கை மதிப்பு 25,893 ஆகும். எனவே பாஜகவுக்கு சிவேசனை ஆதரவு அளிக்காவிட்டால் வெற்றிக்கு தேவையான வாக்கு எண்ணிக்கை மதிப்பைவிட பாஜகவுக்கு 20000 வாக்கு மதிப்பு, குறைந்துவிடும். எனவே பாஜக வேட்பாளர் வெற்றிபெற முடியாது.
கூட்டணி பலம்
மகாராஷ்டிராவில் இருந்து லோக்சபாவுக்கு 67 எம்.பிக்களும், ராஜ்யசபாவுக்கு 19 எம்.பிக்களும் தேர்வாகியுள்ளனர். ஒவ்வொரு எம்.பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும். பாஜக-சிவசேனை இணைந்து 52 எம்.பிக்களை கொண்டுள்ளது. வாக்கு மதிப்பு 36816 ஆகும். காங்கிரஸ் கூட்டணியின் மகாராஷ்டிரா பலம் 10620 ஆகும். சிவசேனை காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளித்தால் வாக்கு மதிப்பு 25488 ஆக உயரும்.
பிற கட்சிகள் ஆதரவு
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான விஷயம் என்னவென்றால், அதிமுக, ஒடிசாவில் பிஜு ஜனதாதளம், பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற வாய்ப்புள்ளது. ஆனால்ல எதிர்க்கட்சிகள் வலிமையான வேட்பாளரை நிறுத்தினால், இக்கட்சிகள் எடுக்கும் முடிவுதான் பாஜக வேட்பாளர் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.