இன்று கர்நாடக பந்த்... யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை #karnatakabandh
பெங்களூரு: கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் நடத்தவுள்ள பந்த் போராட்டத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மக்கள் அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வர வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது கர்நாடகத்தில் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கன்னட அமைப்புகள் பலவும் இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளன. போராட்டங்களில் குதித்துள்ளன. இதில் வன்முறையும் தலை தூக்கியுள்ளது.
இந்த நிலையில் இன்று கர்நாடகம் முழுவதும் மாநிலம் தழுவிய அளவில் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து விரிவான பாதுகாப்புக்கு கர்நாடக போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

முழு அளவில் பந்த்
கர்நாடகத்தில் இந்த பந்த் முழு அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், பயம், அச்சம் காரணமாகவே பாதிப் பேர் கடை, வர்த்தக நிறுவனங்களை மூடி விடுவார்கள். தனியார் பள்ளிகள் நாளை முழமையாக இயங்காது. பொதுப் போக்குவரத்தும் அடியோடு பாதிக்கப்படும் என்றே தெரிகிறது.

தமிழ்ப் படம் கிடையாது.. சேனலும் தெரியாது
ஏற்கனவே கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் டிவி சேனல்கள் தெரியவில்லை. நிறுத்தி விட்டனர். தியேட்டர்களிலும் தமிழ்ப் படங்களைத் தூக்கி விட்டனர். நாளை தியேட்டர்களும் மூடப்படுகின்றன. ஒரு படமும் ஓடாது என்று திரைப்பட அமைப்புகள் அறிவித்துள்ளன. புதிய கன்னடப் படங்களை வெளியிடுவதையும் சனிக்கிழமைக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

மைசூரு சாலையை தவிர்க்க வேண்டும்
பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம், அதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஓசூர் சாலையிலும் நாளை ஒரு வாகனமும் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடாது என்று ஏற்கனவே அறிவித்து விட்டனர்.

அரசு மறைமுக ஆதரவு
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை கொடுத்து விட்டனர். அதேசமயம், அரசு பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்குமா அல்லது விடுமுறையா என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. பந்த்துக்கு அரசு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. எனவே கர்நாடக அரசு பந்த்தை ஆதரிக்க முடியாது. இருப்பினும் மறைமுகமாக பந்த்துக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு ஆதரவு தருவதாக கூறப்படுகிறது. எனவே நாளை அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வராவிட்டாலும் கூட அரசு கண்டு கொள்ளாது என்றே கருதப்படுகிறது.

வட கர்நாடகத்தில் ஆதரவு இருக்காது
பந்த் முழு அளவில் இருக்கும் என்றாலும் கூட வழக்கம் போல வட கர்நாடகாவில் பந்த் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டனா, ராம்நகர், சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் போலீஸ் குவிப்பு
பெங்களூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு விதான சவுதா முன்பு அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் கர்நாடக காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications