தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவே அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறது.. தமிழகமோ பிளவுபட்டு கிடக்கிறது
பெங்களூர்: காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்துவரும் கர்நாடகாவே, நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில், தண்ணீர் கேட்கும் தமிழகமோ அதுபோன்ற எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
நடுவர் மன்ற தீர்ப்புபடி, காவிரியிலிருந்து அக்டோபர் மாதத்தில் 50 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியது கட்டாயம். வறட்சியை காரணம் காட்டி இதுவரை கர்நாடகா அந்த அளவு தண்ணீர் தரவில்லை.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் சில தினங்கள் முன்பு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக முதல்வர் நாளை மறுநாள், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
தமிழகம் நெருக்கடி தருவதால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அரசுக்கு ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள்.
அதேநேரம், கண்டிப்பாக தண்ணீர் தேவை.. என்ற நிலையில் உள்ள தமிழக நலனுக்காக, அரசு எந்த விதமான அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டவில்லை.
தண்ணீர் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள தமிழக அரசுக்கு, கோர்ட்டிலேயே கர்நாடகா பதிலளிக்க முடியும். அதுதான் நடைமுறை. அதற்கும்கூட அனைத்து கட்சியை கூட்டி ஆலோசிக்கிறது கர்நாடகா. ஆனால், சட்டத்தால் மட்டுமின்றி, அரசியல் நகர்வுகளாலும் நெருக்கடி தர வேண்டிய தமிழக அரசோ மூச்சுவிடவில்லை.
நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டத்தில், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்களான சதானந்தகவுடா, அனந்தகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டம் முடிந்த பிறகு அனைத்து கட்சி பிரமுகர்களும், மத்திய அமைச்சர்கள் தலைமையில் பிரதமரை சந்தித்து, தமிழக கோரிக்கையை நிராகரிக்க கோர வாய்ப்புள்ளது. ஆனால் இதுபோன்ற அரசியல் நெருக்கடியை தமிழகம் தர வேண்டுமானால் முதலில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக டெல்லி செல்ல வேண்டியது அவசியம்.
தமிழக சட்டசபையில் கூட ஒற்றுமையில்லாமல், அதிமுக-திமுக மோதிக்கொண்டுள்ள நிலையில், காவிரிக்காக இவ்விரு கட்சிகளும் ஒன்று சேருவது கேள்விக்குறியே.