காவிரி வழக்கு விசாரணையால், செப்டம்பர் 12 பயத்தில் தவித்த பெங்களூர் தமிழர்கள்! தப்பித்தது நகரம்
பெங்களூர்: உச்சநீதிமன்றத்தில் இன்று, கர்நாடகாவுக்கு எதிராக உத்தரவு வெளியானால் கலவரம் வெடிக்கலாமோ என்ற அச்சம் கர்நாடக வாழ் தமிழர்கள் மத்தியில் இருந்தது. குறிப்பாக, தலைநகர் பெங்களூரிலுள்ள மக்களிடையே இந்த அச்சம் அதிகமாக இருந்தது. ஆனால் அதிருஷ்டவசமாக வன்முறை சம்பவங்கள் நிகழாமல் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு, கர்நாடகா 7 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கர்நாடக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியதோடு, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுவதை நிறுத்திவிட்டது.
இந்த நிலையில், மீண்டும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது. கர்நாடக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சாட்டையை வீசியது. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
இவ்வாறு, கர்நாடகாவுக்கு எதிராக ஒரு உத்தரவு வெளியானால் கலவரம் வெடிக்கும் அச்சம் கர்நாடக வாழ் தமிழர்கள் மத்தியில் காலை முதலே நிலவி வந்தது. குறிப்பாக, தலைநகர் பெங்களூரிலுள்ள மக்களிடையே இந்த அச்சம் அதிகமாக இருந்தது. ஏனெனில் கடந்த 12ம் தேதி பெங்களூரில் நடைபெற்ற கலவரம், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் நிலைவரை கொண்டு சென்றிருந்தது.
தமிழர்களே இலக்கு
அன்றைய தினம் தமிழர்கள் சொத்துக்கள் தேடி, தேடி எரிக்கப்பட்டன. அடையார் ஆனந்தபவன், பூர்விகா போன்ற தமிழக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பஸ், லாரிகள் என மொத்தம் 97 வாகனங்கள் பெங்களூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் எரிக்கப்பட்டதாக அரசே அறிவித்தது.
பள்ளி செல்லாத குழந்தைகள்
எனவே, அச்சத்தின் காரணமாக, இன்று பலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்தனர். தமிழக லாரிகள் கர்நாடகாவுக்குள் இயக்கப்பட ஆரம்பித்துள்ள நிலையில், கலவரம் ஏற்பட்டால் லாரிகள் நிலைமை என்னவாகும் என்ற பீதி லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு ஏற்பட்டது. எனவே மதியம் முதல், எல்லை மாவட்டங்களிலேயே லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
விசாரணை முடிவை அறிய ஆர்வம்
வழக்கு விசாரணை 2 மணிக்கு ஆரம்பித்தது. விசாரணை முடிவை அறிந்து கொள்வதற்காக டிவி சேனல்கள் முன்பு உட்கார்ந்து கொண்டனர் தமிழர்கள் பலரும். பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள், கலவரம் ஏற்பட்டால் தங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் உடனடியாக வாட்ஸ்அப்பில் தகவலை பரிமாறும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், வன்முறை ஏற்படாமல் போலீசார் உரிய முன்னெச்சரிக்கை எடுத்திருந்தனர்.