காவிரி பிரச்சினை: கர்நாடகாவில் தனுசின் 'தொடரி' வெளியாவதில் சிக்கல்
பெங்களூர்: காவிரி நீர் பிரச்சனை காரணமாக தனுஷ் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'தொடரி 'திரைப்படம் கர்நாடக திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நீர் பங்கீடு குறித்து உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக இப்போது வரை கர்நாடக மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. கர்நாடகாவிற்கு படப்பிடிப்புக்கு போனவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ் திரைப்படத்தை திரையிடுவது பிரச்சனையில்தான் முடியும் என திரையரங்க உரிமையாளர்கள் நினைக்கின்றனர்.
சில கன்னட அமைப்புகள் தமிழ் திரைப்படங்களை திரையிடக்கூடாது என தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி வருகிறதாம். எனவே பெரிய நடிகர் படம் என்பதால் அதிக விலை கொடுத்து வாங்கி, நஷ்டப்பட்டு, பிரச்சனையில் சிக்க கர்நாடக திரையரங்க உரிமையாளர்கள் தயாராக இல்லையாம்.
கிடாரி படம் ரிலீஸ் செய்யப்பட்ட தியேட்டர்களில் கலவரம் வெடித்ததால் படம் உடனடியாக நிறுத்தப்பட்டது. விக்ரம் நடித்த 'இருமுகன்' திரைப்படம் காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடக மாநிலத்தில் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படமான 'தொடரி' பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே செப்டம்பர் 22ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. காவிரி நதி நீர் பிரச்சனை காரணமாக கர்நாடக திரையரங்குகளில் தொடரி வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.