காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கவே முடியாது.. கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுப்பு
பெங்களூரு : காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் உள்ள தண்ணீர் இருப்பு குறித்து தமிழக அரசுக்கு தவறாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறியதாவது...
கர்நாடகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால், கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை.
இந்த சூழலில், காவிரி நதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக அரசு கோரி வருகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் உள்ள தண்ணீர் இருப்பு குறித்து தமிழக அரசுக்கு தவறாக தகவல் கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதங்களில் கிருஷ்ணராஜசாகர் அணையில் 49 டி.எம்.சி. தண்ணீர் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது இந்த அணையில் 25 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. கர்நாடக மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாமல் தவித்து வருகிறோம். கர்நாடக விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டியது கர்நாடக அரசின் தலையாய கடமையாகும்.
எனவே, தமிழக அரசு கோரி வருவதுபோல காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புப்படி காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை. அதனால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது.
எங்களின் நிலைப்பாட்டை காவிரி நடுவர்மன்றத்திலும் எடுத்துரைப்போம். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க இயலாததற்கான காரணங்களையும் முன்வைப்போம். கர்நாடகத்தின் நிலையை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.