ஆன்ட்ரிக்ஸ் மெகா ஊழல்... இஸ்ரோவின் மாதவன் நாயர் உட்பட மூவரிடம் சி.பி.ஐ. கிடுக்குப்பிடி விசாரணை!
டெல்லி: நாட்டை அதிர வைத்த ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட மிக மோசமான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் நடந்த ரூ 2.32 லட்சம் கோடி ஊழல் வழக்கு மீண்டும் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் மாதவன் நாயகர், ராதாகிருஷ்ணனிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது ஆன்ட்ரிக்ஸ். இது தனியார் நிறுவனங்களுக்கும் செயற்கைக்கோள்களை தயாரித்து கொடுக்கிறது.
இதனடிப்படையில் தேவாஸ் என்ற நிறுவனத்துக்கு எந்த ஒரு லாபமும் இல்லாமல் ஜிசாட் 6, ஜிசாட் 6 ஏ ஆகிய செயற்கைக்கோள்களை இஸ்ரோ தயாரித்து கொடுத்தது. இதுபோன்ற ஊழல்களால் ரூ2.32 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலால் நாடே அதிர்ந்தது.
பின்னர் ஆன்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தேவாஸ் நிறுவனம் சர்வதேச டிரிபியூனலுக்கு போனது. அங்கே, இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ 4,432 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. தற்போது கையிலெடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், மாதவன் நாயர் என பல பெரும் தலைகள் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவர்களிடம் அண்மையில் சி.பி.ஐ. கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளது. இதனிடையே இஸ்ரோவின் பொருளாதார ஆலோசகராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன், ஆன்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததாகவும் அவரது அறிக்கையின்படி இஸ்ரோ செயல்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய ஊழல், அபராதம் எதுவும் நடந்திருக்காது என்கிறார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி.
இந்த ஊழல் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இஸ்ரோ பொருளாதார ஆலோசகரும் தற்போதைய மேற்கு வங்க கூடுதல் தலைமைச் செயலருமான பாலச்சந்திரன், ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் முன்னர் இன்டல்செட் கம்பெனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் தேச பாதுகாப்பு குறித்த அம்சங்கள் தெளிவாக இருந்தன. அதில் இன்டல்செட் நிறுவனமானது இஸ்ரோவின் அனுமதியில்லாமல் யாரையும் பங்குதாரராக சேர்க்க முடியாது. ஆனால் தேவாஸ் நிறுவன ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் இல்லை. அந்நிறுவனம் நினைத்தால் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பை கூட சேர்க்கும் நிலை இருந்தது.
தேவாஸ் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில் இஸ்ரோ தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன்தான் செயல்பட்டார். இந்த தேவாஸ் நிறுவனத்தை நடத்துவது இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி. இதில் ராதாகிருஷ்ணன் உட்பட பலரும் பங்குதாரர்கள். இந்த ஊழலை நான் அம்பலப்படுத்தியபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைப்பதற்காக செய்வதாகவும் கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானவன் என்றும் விமர்சித்தனர் என்றார்.