ரூ570 கோடி விவகாரம்: முதல் கட்ட விசாரணையை முடித்து வழக்குப் பதிவு செய்தது சிபிஐ!!
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலின் போது 3 கண்டெய்னர் லாரிகளில் ரூ570 கோடி எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் முதல் கட்ட விசாரணையை முடித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடி பிடிபட்டது. அது பாரத ஸ்டேட் வங்கிக்குரிய பணம் என சொல்லப்பட்டது.
ஆனால் இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி, அந்தப் பணம் யாருடையது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரி திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் சிபிஐ-யில் புகார் கொடுத்தார்.
அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் இந்தப் புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், ரூ.570 கோடி குறித்த புகாரைப் பதிவு செய்து விசாரிக்கும்படி சிபிஐ-க்கு உத்தரவிட்டது.
சிபிஐயும் விசாரணை நடத்தியதில், கண்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலியானவை என்றும் பணத்தை திட்டமிட்டு கடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் பல சந்தேகங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் டிகேஎஸ் இளங்கோவன், சிபிஐ இயக்குநரிடம் நேரில் அளித்திருந்தார்.
அதில், ரூ.570 கோடிக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, இது ஹவாலா பணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கண்டெய்னர் லாரிகளின் எண்களும், அதன் உரிமையாளர்களும் போலி என்று தெரியவந்துள்ளது. இப்படி ஏராளமான சந்தேகங்கள் இருப்பதால் இந்த விசார ணையை முழுமையாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவ்வழக்கில் சிபிஐ தம்முடைய முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்து முறைப்படி வழக்கு பதிவு செய்துள்ளது.