கொல்கத்தா கமிஷனரை விசாரிக்க வந்த சிபிஐ.. அதிரடியாக கைது செய்த போலீஸ்.. கொந்தளித்த மமதா
Recommended Video

கொல்கத்தா: கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அவரது வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீஸார் அதிரடியாக கைது செய்த சம்பவத்தால் கொல்கத்தாவே இன்று இரவு பரபரப்பானது.
சாரதா நிதி நிறுவன முறைகேடு விவகாரத்தில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. ஆனால், அவரை 3 நாட்களாக காணவில்லை என்று கூறப்படுகிறது.

முறைகேடு தொடர்பாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.
ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வெளியான தகவல்கள் அடிப்படையற்றது என்று கொல்கத்தா போலீஸ் தெரிவித்துள்ளது. கொல்கத்தா போலீஸ் அதிகாரி ஜாவித் சாமிம் வெளியிட்ட அறிக்கையில், பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ நுழையக் கூடாது என முதல்வர் மமதா பானர்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் வந்ததால் மமதா பானர்ஜி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ராஜிவ் குமார் வீட்டுக்கு விரைந்து வந்தார். என்ன தைரியம் இருந்தால் வாரண்ட் இல்லாமல் சிபிஐ, கமிஷனர் வீட்டுக்கு வர முடியும் என்று அவர் கொந்தளித்துள்ளார். கொல்கத்தாவில் இந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications