26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அதே இடம்.. மமதா பானர்ஜி தர்ணா.. மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி!
கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா செய்ய தொடங்கியுள்ளார்.
கொல்கத்தா: கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா செய்ய தொடங்கியுள்ளார்.
இன்று கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய முயன்றது. தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகியவற்றில் குற்றம்சாட்டி இந்த கைது நடவடிக்கையை எடுக்க சிபிஐ முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்துள்ளது.
கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகள் 15 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
தர்ணா நடத்துகிறார்கள்
தற்போது இதனால் மத்திய அரசுக்கு எதிராக மமதா பானர்ஜி தர்ணா நடத்தி வருகிறார். அரசியலமைப்பை காப்பாற்றுங்கள் என்று மமதா பானர்ஜியின் தர்ணாவிற்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. கொல்கத்தா மெட்ரோ சேனல் பகுதியில் மமதா தர்ணா செய்து வருகிறார்.கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரும் தர்ணாவில் கலந்து கொண்டுள்ளார்.
அதே இடம்
இதே இடத்தில் கடந்த 2006ல் மமதா பானர்ஜி டாட்டா நிறுவனத்திற்கு எதிராக தர்ணா இருந்துள்ளார். மேற்கு வங்கத்தின் சிங்குரில் டாட்டா நிறுவனம் நானோ தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக அவர் 26 நாட்கள் உண்ணாவிரம் இருந்தார். அது அவர் அரசியல் வாழ்க்கையில் பெரிய திருப்பமாக அமைந்தது.
பெரிய போராட்டம்
கடைசியில் அந்த போராட்டம் வெற்றியில் முடிந்தது. டாட்டா நிறுவனம் தனது தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றியது. அப்போது மமதாவிற்கு குவிந்த விவசாயிகளின் ஆதரவுதான் தற்போது அவரை முதல்வர் ஆக்கியுள்ளது. அவரது அரசியலுக்கு அது பெரிய அஸ்திவாரமாக அமைந்தது.
கடும் எதிர்ப்பு
தற்போது அதே இடத்தில் இவர் மீண்டும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய தொடங்கி இருக்கிறார். இதனால் அங்கு மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. மமதா பானர்ஜியுடன் நாளையில் இருந்து திரிணாமுல் எம்எல்ஏக்களும் தர்ணா இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.