சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது: உ.த்தரபிரதேச அரசை கலைக்க மாயாவதி வலியுறுத்தல்
டெல்லி: உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதால், சமாஜ்வாடி தலைமையிலான அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என்று மத்திய அரசை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, " உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. எனவே அங்கு ஆளும் அரசை கவிழ்த்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். மக்களுக்கு எதிராக நிகழும் அட்டுழியங்கள் பற்றி அங்கு எந்த அமைச்சர்களும் பேசவில்லை. ஆனால் ஒட்டுமொத்த காவல் துறையும் அமைச்சரின் காணாமல் போன எருமை மாடுகளை தேடும் பணியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மத்திய அரசும் ஆளுநரும் இந்த விஷயத்தை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.அராஜகவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு மாயாவதி கூறினார்.