அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளைக்கு 67 ஏக்கர் நிலம் .. பிரதமர் மோடி
வாரணாசி: அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளைக்கு மத்திய அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு. இதனையடுத்து அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றி மத்திய அரசு ஏற்கனவே 67.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியிருந்தது. தற்போது இந்த 67 ஏக்கர் நிலத்தையும் ராமர் கோவில் கட்டுவதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி உருவாக்கப்பட்ட அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வாரணாசியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் தொடர்பாக மத்திய அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. அயோத்தியில் மத்திய அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை புதியதாக உருவாக்கப்பட்ட ராமர் கோவில் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.